தினசரி விலை நிர்ணயம் எதிரொலி.. பெட்ரோல் பங்குகள் மூடப்படும் அபாயம்!
தினசரி விலை நிர்ணயத்தால் பெட்ரோல் பங்குகள் நஷ்டத்தை சந்திப்பதால் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி விலையை நிர்ணயிப்பதால் பெட்ரோல் பங்குகளை இழுத்து மூடும் நிலை உருவாகி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியா முழுவதும் பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இண்டியன் ஆயில் மற்றும் இந்துஸ்தான் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் செய்துவருகின்றன. இந்த நிறுவனங்கள் முன்பு மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வந்தன. ஆனால் ஜூன் 16ஆம் தேதி முதல் தினமும் விலையை நிர்ணயித்து வருகின்றன.
இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விறபனை செய்யும் டீலர்கள் பெருத்த நஷ்டமடைவதாகக் கூறுகின்றனர். இந்த நஷ்டத்தை தாங்க இயலாத டீலர்கள் பெட்ரோல் பங்குகளை மூடும் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பின் தலைவர் முரளி கூறுகையில், தமிழ்நாட்டில் மொத்தம் 4850 பெட் ரோல் பங்குகள் உள்ளன. இவற்றுக்கு 12,000 முதல் 24 லிட்டர் வரை பெட்ரோல் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுவதால், அதிகவிலைக்கு வாங்கிய பெட்ரோலை குறைந்த விலைக்கு விற்கும் நிலை உருவாகுகிறது.
விலை நிர்ணயம் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் விலையில் தான் மாற்றம் செய்கிறார்கள். டீலர்களுக்குக் கொடுக்கும் விலையில் எந்த மாற்றமும் செய்வதில்லை. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது என்று கூறினார்.
மேலும், டீலர்களுக்கு தினம் 4000 லிட்டர் கொடுத்தால் போதும் என்பது எங்கள் கோரிக்கை. சமீபகாலமாக பெட்ரோலை லாரிகளில் ஏற்றி சில்லரையாக விற்று வருகின்றனர். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.