பிளாஸ்டிக் கழிவுக்கு அதிக வரி - நெல்லையில் கடையடைப்பு
மத்திய அரசு பிளாஸ்டிக் கழிவுகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பில் ஈடுபட்டனர்.
நெல்லை : மத்திய அரசு பிளாஸ்டிக் கழிவுகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு பிளாஸ்டிக் கழிவுகளுக்கு 18 சதவிதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதை நீக்க வலியுறுத்தி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் நிறுவனங்களும் போராட்டம் அறிவித்திருந்தன.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் 180 கடைகளும், தூத்துக்குடியில் 150 கடைகளும் என மொத்தம் 230 கடைகள் அடைக்கப்பட்டன. நெல்லை சந்திப்பில் பல பிளாஸ்டிக் கடைகளுக்கு முன்பு ஜிஎஸ்டி வரிக்கு எதிராக கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. நெல்லை, தூத்துக்குடியை சேர்ந்த பிளாஸ்டிக் வியாபாரிகள் பலர் கடையை மூடி விட்டு சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிளாஸ்டிக் வியாபாரிகள் கூறுகையில், பிளாஸ்டிக் கழிவுகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பால் அவற்றின் மறுசுழற்சி குறையும். இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிட அதிக வாய்ப்புகள் உள்ளது. மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை துவங்கி பல்வேறு பணிகளை செய்து வரும் நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு கூடுதல் வரி விதிப்பது அதை சார்ந்துள்ள வியாபாரிகள் மட்டுமின்றி தூய்மை இந்தியா திட்டத்தையும் அது கடுமையாக பாதிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவிக்கின்றனர்.