தமிழகத்திற்குள் புகுந்து இஷ்டம் போல தமிழர்களைக் கைது செய்யும் ஆந்திரா.. தடுக்கக் கோரி வழக்கு
சென்னை: ஆந்திர போலீஸார் எத்தனை தமிழர்களைக் கைது செய்துள்ளனர் என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தங்கம் என்பவர் இதுதொடர்பாக பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா போலீசார் கடந்த ஜனவரி 24ந் தேதி என் சகோதரர் ரவியை பிடித்து சென்றனர். 3 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்ரவதை செய்து, 27ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். என்னுடைய தம்பியின் அரைநிர்வாண போட்டோ வாட்ஸ்அப்பில் வெளியானது.
இதுபோல முகமது ரபி என்பவரை ஆந்திர போலீசார், தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக பிடித்துச் சென்றனர். ஆனால், கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தவே இல்லை. உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த பின்னரே, அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.
அதேபோல, சாகுல் என்பவரை செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் கைது செய்தனர். கடத்தல் சம்பவம் நடந்த காலக்கட்டத்தில், சாகுல் அமீது துபாயில் இருந்துள்ளார். ஆனால், அவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வாறு பொய் வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவர்களை ஆந்திர போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
தமிழகத்துக்குள் வந்து யாரிடமும் எந்த தகவலும் சொல்லாமல், விருப்பம்போல் விரும்பிய நபர்களை அவர்கள் கைது செய்கின்றனர். எனவே, சட்டவிரோதமாக பொய் வழக்கில் தமிழகத்தில் இதுவரை எத்தனை பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர் என்று விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தை சேர்ந்தவர்களை தமிழக போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமல் கைது செய்ய ஆந்திர மாநில போலீசாருக்கு தடை விதிக்க வேண்டும். பிற மாநிலத்துக்கு சென்று அங்குள்ளவர்களை போலீசார் கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வரையறை செய்யும்படி மத்திய கேபினட் அமைச்சகத்தின் செயலர், உள்துறை அமைச்சகத்தில் செயலர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று தங்கம் கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் திருமாறன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, நீதிபதிகள் இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 3ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.