பிளஸ் 2 முடிவுகள் – வேளாண் பாடத்தில் முதலிடம் பெற்று ஈரோடு மாணவர் சாதனை
ஈரோடு: பிளஸ் 2 தேர்வில் வேளாண் செயல்முறை பாடத்தில் 600க்கு 600 மார்க் பெற்று மாணவர் பாரதிதாசன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மாணவர் பாரதிதாசன் ஈரோடு மாவட்டம் அந்தியூர் மங்களம் மெட்ரிக் பள்ளியில் படித்துள்ளார். பாரதிதாசனின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரம் ஆகும். தந்தை ராஜ்குமார். கால்நடை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
மாநில அளவில் சாதனை படைத்த மாணவன் பாரதிதாசனை மங்களம் பள்ளி தாளாளர் கந்தசாமி, தலைமை ஆசிரியர் ரெங்கசாமி மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த சாதனை பற்றி மாணவன் பாரதிதாசன், "எனக்கு சிறுவயதிலேயே விவசாயத்தில் ஆர்வம் உண்டு. இதனால் வேளாண் செயல் முறை பாடத்தில் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளேன்.
இந்த வெற்றிக்கு பள்ளி நிர்வாகத்தினர் என்னை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எதிர்காலத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் சார்ந்த படிப்புகளை தேர்தெடுத்து படிக்கவே விருப்பம்" என்று தெரிவித்துள்ளார்.