மதுரையில் பிளஸ் 2 மாணவர் குத்திக்கொலை - வழிப்பறி கும்பல் கைவரிசை
மதுரையில் செல்போனுக்காக பிளஸ் 2 மாணவர் ஒருவரை வழிப்பறி கும்பல் குத்தி கொலை செய்துள்ளது.
மதுரை: செல்போனுக்கான மதுரையில் பிளஸ் 2 மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மகால் 7-வது தெருவைச் சேர்ந்தவர் குமரேசன் பாபு. இவர் அந்த பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
இவரது மகன் நாகராஜ்,17 தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தற்போது தேர்வு நடை பெற்று வருவதால் நாகராஜ் இரவு பகலாக படித்து வந்தார்.
நேற்று மாலை தனது உறவினரை பார்ப்பதற்காக குமரேசன்பாபு குடும்பத்துடன் வண்டியூர் சென்றார். கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் திரும்பிய நியில் நாகராஜ் மட்டும் ஷேர் ஆட்டோ மூலம் வீடு திரும்பினார்.
இரவு 10 மணி அளவில் கீழவாசல் பகுதியில் வந்து இறங்கி உள்ளார். அவரது வீட்டிற்கு நாகராஜ் நடந்து சென்றபோது பந்தடி பகுதியில் ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. அந்த கும்பல் நாகராஜிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றது. ஆனால் நாகராஜ் அதனை கொடுக்காமல் அவர்களுடன் போராடினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த கத்தியால் நாகராஜின் தொடை பகுதியில் பலமாக குத்தியது. இதில் அவர் நிலைகுலைந்ததும் அந்த கும்பல் நாகராஜின் செல்போனை பறித்து விட்டு ஓடிவிட்டது.
கத்திக் குத்தில் கீழே விழுந்த நாகராஜ் ரத்த வெள்ளத்தில் மயக்கம் அடைந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சம்பவம் நடந்த இடத்தில் ஆள்நடமாட்டம் இல்லை. இதனால் நீண்ட நேரம் அவரது உடலில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறி மரணமடைந்துள்ளார்.
மாணவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கொலை குறித்து தெற்குவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க மதுரை மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.