காதல் தகராறு… ப்ளஸ் 1 மாணவி பலாத்காரம் செய்து கொலை!... திருச்செங்கோடு அருகே பரபரப்பு
நாமக்கல்: திருச்செங்கோடு அருகே தேர்வு எழுத சென்ற பிளஸ்-1 பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்று சடலத்தை சாக்குமூட்டையில் கட்டிப்போட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தனது காதலை புறக்கணித்த காரணத்தால் மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கைதான நபர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் இலக்கியம்பட்டியை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் இவர் ஒரு விவசாய கூலி தொழிலாளி இவர் தனது குடும்பத்தை நாமக்கல் மாவட்டம் எளச்சிபாளையம் அருகில் உள்ள பெரியமணலிக்கு மாற்றி அங்குள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கி கொண்டு அதே ஊரில் ஒரு விவசாயின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வருகிறார்
இவரது மகள் ஸ்ரீஜா வயது 16 அங்குள்ள பெரியமணலி அரசு மேல்நிலைப்பள்ளியில் +1 அதாவது 11 ஆம் வகுப்பு படித்து வந்தார் தற்போது 10 ஆம் வகுப்பு தேர்வு நடப்பததால் தனது வகுப்பிலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடம் வேண்டி ஸ்ரீஜா உள்ளிட்ட மாணவ மாணவிகள் மதியம் 1.30 மணிக்குதான் வகுப்புக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனையடுத்து அவர் வழக்கம் போல் நேற்று மதியம் தனது பள்ளிக்கு சென்றார்
ஆனால் மாணவி பள்ளிக்கு வரவில்லை அதே போன்று மணிகண்டன் என்ற மாணவனும் பள்ளிக்கு வரவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். இதனையடுத்து செல்வராஜ் அக்கம், பக்கம் என எங்கு தேடியும் ஸ்ரீஜா கிடைக்கவில்லை.
அப்போது, ஸ்ரீஜா படித்து வரும் பள்ளியின் அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு இடத்தில் நிழலுக்காக போடப்பட்டு இருந்த ஒரு கொட்டகையில் ஸ்ரீஜாவின் சைக்கிள் நின்றுள்ளது. இதை பார்த்துவிட்டு அங்கு சென்று தனது மகளை செல்வராஜ் தேடி உள்ளார். அப்போது, அங்கு ஒரு சாக்குமூட்டை கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. அதை செல்வராஜ் பிரித்து பார்த்தபோது ஸ்ரீஜா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை செல்வராஜ், உடனடியாக எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு வந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் உள்ளிட்ட காவல் படையினர் மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பலாத்காரம் செய்து கொலை
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட எலச்சிபாளையம் போலீசார், சந்தேகத்தின்பேரில் திலீபன் (20) என்ற வாலிபர் பிடித்து விசாரித்து உள்ளனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், அவரது நண்பர் சந்தோஷ் (20), மற்றும் மாணவியுடன் படித்து வந்த சக மாணவரான மணிகண்டன் (17) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்துள்ளனர்.
மூவர் கைது
இதில் திலீபனும், சந்தோசும் சேர்ந்து மாணவி ஸ்ரீஜாவை பாலியல் பலாத்காரம் செய்து அதன்பின் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து பிணத்தை சாக்குமூட்டையில் கட்டி வீசி சென்ற அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது. இதை தொடர்ந்து, மாணவர் மணிகண்டன், திலீபன் மற்றும் சந்தோஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டனர்.
பரபரப்பு வாக்குமூலம்
திலீபன் போலீசில் அளித்துள்ள பரபரப்பான வாக்குமூலத்தில், ''நானும், மாணவி ஸ்ரீஜாவும் உறவினர்கள். திடீரென ஸ்ரீஜா என்னுடன் பேசுவதை குறைத்து கொண்டார். இதுப்பற்றி அவரிடம் கேட்டபோது எந்த பதிலும் சொல்லாமல் புறக்கணித்தார். ஸ்ரீஜாவின் பிரிவு எனக்கு அதிர்ச்சி அளித்தது.
காதல் புறக்கணிப்பு
நன்றாக பேசி வந்த பெண் திடீரென விலகி செல்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, அவர் தன்னுடன் படிக்கும் மாணவர் மணிகண்டனை காதலிப்பது தெரியவந்தது. ஸ்ரீஜா மற்றும் மணிகண்டனை சந்தித்து காதலை கைவிடுமாறு கூறினேன். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்தனர். என்னை ஏமாற்றியதால் ஸ்ரீஜா மீதும், என் காதலியை அபகரித்ததால் மணிகண்டன் மீதும் எனக்கு கோபம் ஏற்பட்டது.
கொலை நடந்தது எப்படி?
நேற்று ஸ்ரீஜாவும், மணிகண்டனும் பள்ளிக்கு செல்லும் வழியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் கொட்டகையில் தனிமையில் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு நானும் சந்தோஷும் விரைந்து சென்றோம். அப்போது, அவர்கள் இருவரும் அங்கே தனிமையில் பேசிக்கொண்டு இருந்தனர். இது எனக்கு கொலை வெறியை ஏற்படுத்தியது. இதை சகித்துகொள்ள முடியாத நான், அவர்களிடம் வாக்குவாதம் செய்தேன். அப்போது, எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. உடனே மணிகண்டனை அங்கிருந்து விரட்டி அடித்தோம்.
சாக்கு மூட்டையில் சடலம்
அதன் பின்னர், ஸ்ரீஜாவை நானும், எனது நண்பர் சந்தோஷும் பாலியல் பலாத்காரம் செய்தோம். இதில் ஸ்ரீஜா மயங்கி விழுந்தாள். நடந்த சம்பவத்தை அவள் வெளியே சொல்லிவிடுவாளோ என்று பயந்த நாங்கள், உடனே அவள் கழுத்தை நெரித்து கொலை செய்தோம். பின்னர் அங்கு கிடந்த ஒரு பையை எடுத்து அவளது பிணத்தை திணித்து மூட்டையாக கட்டிவிட்டு அங்கிருந்து எதுவும் தெரியாததுபோல் தப்பி சென்று விட்டோம். ஆனாலும் தற்போது போலீசார் எங்களை கண்டுபிடித்து விட்டனர்." என்று திலீபன் கூறியுள்ளார்.