பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி ரிசல்ட் வெளியாவது எப்போது? எதிர்பார்ப்பில் பெற்றோர்கள்
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் இன்னும் அறிவிக்கப்படாததால் தேர்வெழுதிய மாணவர்களும், பெற்றோர்களும் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர். தேர்தலுக்கு முன்பாகவே தேர்வு முடிவுகளை அரசு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதியுள்ளனர். மே 7 அல்லது 9ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
விடைத்தாள் மதிப்பீடு, மதிப்பெண் தொகுப்பு பணி உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் இன்னும் தேர்வு முடிவு நாள் வெளியிடப்படாததால் தேர்வெழுதிய மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
விண்ணப்பங்கள் விநியோகம்
பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கலை அறிவியல் கல்லூரிகளில் சேரவும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு புதிதாக மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல்
பிளஸ்2 தேர்வு முடிவு வெளியாகி மதிப்பெண் தெரிந்தால்தான், மாணவர்களால் விண்ணப்பங்களை கல்லூரிகளில் சமர்ப்பிக்க முடியும். தேர்வு முடிவு தொடர்பான அறிவிப்பை தேர்வுத்துறை இதுவரை வெளியிடாததால் ஒருவேளை சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர்தான் தேர்வு முடிவு வெளியிடப்படுமோ என்றும் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ரிசல்ட் வெளியாவதில் தாமதம்
இந்த நிலையில், பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறைக்கு தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்தனர். தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்று கூறும் தலைமை ஆசிரியர்கள் அது தொடர்பான கூட்டங்களை கூட இதுவரை நடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது?
பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20ம் தேதியே முடிவடைந்துவிட்டது. குறிப்பிட்ட தேதியில் பிளஸ்2 தேர்வு முடிவு வெளியாகும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. தேர்வு முடிவு தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாததால் தேர்வெழுதிய மாணவர்களும், பெற்றோரும் குழப்பத்தில் உள்ளனர்.
தவிப்பில் பெற்றோர்கள்
தேர்வு முடிவு தேதி தெரியாத காரணத்தினால் கோடை விடுமுறையில் வெளியூர்களுக்குச் செல்வது, உறவினர் வீடுகளுக்குப் போவது, சுற்றுலா செல்வது உள்ளிட்ட விஷயங்களை முடிவுசெய்ய இயலாமல் பெற்றோர் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அரசு அறிவிக்குமா?
கடந்த ஆண்டு பிளஸ்2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகள் அதிகாரப்பூர்வமாக முன்கூட் டியே வெளியிடப்பட்டன. மே 7ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. எனவே, இம்முறையும் பிளஸ்2, எஸ்எஸ்எல்சி முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர் வமாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
சபீதா உத்தரவு
இதனிடையே தேர்வு இயக்குநரகம் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை 7ம் தேதி வெளியிடும் வகையில் தனது பைல்களை தயாரித்துவிட்டது. ஆனால், பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் சபீதா ஐஏஎஸ், ‘பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதியை அரசே முடிவு செய்யும். நீங்கள் வெளியிட வேண்டாம்' என தேர்வு இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
மவுனம் சாதிக்கும் சபீதா
பொதுத் தேர்வு முடிவுகள் அடங்கிய ஃபைல் தற்போது சபீதாவிடமே உள்ளது. இதேபோல் பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் அடங்கிய ஃபைல் இன்னும் தயாரிக்கப்படவில்லையாம். தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடலாம் என முதல்வர் அலுவலகத்தில் சபீதா தரப்பிலிருந்து கேட்கப்பட்டதாகவும் ஆனால், அங்கிருந்து எந்தவித பதிலும் இல்லாததால் தேர்வு முடிவுகள் அடங்கிய ஃபைல் தற்போது சபீதாவின் கையிலேயே உள்ளது.
எப்போது வெளியாகுமோ
பொதுத் தேர்வு முடிவு தேதி இன்னும் அறிவிக்கப்படாததால், சுற்றுலா செல்லவோ, தங்களது விடுமுறையைத் திட்டமிடவோ முடியாமல் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு தேதி எப்போது வெளியாகும் என்பது தற்போது சபீதா ஐஏஎஸ் கையில்தான் உள்ளது.