தமிழக மீனவர்கள் விவகாரம்... இலங்கை பெயரை சொல்லாமல் தவிர்த்த மோடி!
பிரதமர் மோடி அப்துல் கலாம் நினைவு மணிமண்டபத்தைத் திறந்து வைத்துப் பேசிய உரையில் தமிழக மீனவர் பிரச்சனை குறித்துப் பேசும் போது இலங்கையின் பெயரைச் சொல்லாமல் கவனமாகத் தவிர்த்தார்.
ராமேஸ்வரம்: அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துப் பேசும்போது மீனவர் பிரச்சனை குறித்துப் பேசினார். அப்போது மிக கவனமாக அண்டை நாடுகளால் மீனவர்களுக்கு பிரச்சனை என்று கூறும்போது இலங்கை பெயரைச் சொல்வதை மிக கவனமாகத் தவிர்த்தார்.
பிரதமர் மோடி, மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இரண்டாம் நினைவு நாளான இன்று ராமேஸ்வரத்தில் 15 கோடி ரூபாய் பொருட்செலவில் அவருக்குக் கட்டப்பட்ட நினைவு மண்டபத்தைத் திறந்து வைத்தார். அதன்பிறகு நீண்ட உரையை ஆற்றினார்.
இந்தியில் தன் உரையைத் தொடங்கிய மோடி, 'நண்பர்களே வணக்கம்' என தமிழில் பேசினார். பிறகு ஆங்கிலத்தில் பேசி மீண்டும் இந்திக்கே தாவினார். மீனவர் பிரச்சனை குறித்துப் பேசும் போது ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் போது பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்று மட்டும் பேசினார்.
ஆனால், அந்த பிரச்சனை இலங்கை அரசின் கடற்படையால் உருவாகிறது என்று சொல்வதை மிகவும் கவனமாகத் தவிர்த்தார். அப்போதும் கூட தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாகத்தான் சொன்னார்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கி வருவதும் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து பல காலமாக நடத்தப்படும் வன்முறையாக இருக்கிறது. தற்போதும் இலங்கை சிறைகளில் 60க்கும் மேற்பட்ட மீனவர்கள் துன்பப்பட்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் 3ஆம் தேதி இரவு தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடுநடத்தியது. அதில் பிரிட்டோ என்ற இளைஞர் பலியானார். அப்போது மீனவர்கள் நடத்திய போராட்டதை வாபஸ் பெற வைக்க மத்திய அரசு பல்வேறு உறுதிமொழிகளை கூறியது. அதில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. மீனவர்கள் பெரும்பான்மையாக வாழும் ராமேஸ்வரத்தில் நின்று பிரதமர் மோடி பேசும்போது கூட தமிழக மீனவர்களின் துயர் துடைக்க வழியெதும் சொல்லவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயமே.