புதிய ரயில், சாலை, ஆழ்கடல் மீன்பிடிப்பு தொடக்க நிகழ்ச்சி, மணி மண்டம் திறப்பு.. களைகட்டிய ராமேஸ்வரம்
ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணிமண்டபத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, இன்று 5 நிகழ்ச்சிகளை திட்டங்களைத் தொடங்கியுள்ளோம் என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணிமண்டபத்தை ராமேஸ்வரத்தில் திறந்து வைத்த பிரதமர் மோடி, ரயில், சாலை, நிலம் , கடல், நினைவுச்சின்னம் என 5 புதிய நிகழ்ச்சிகளை, தமிழகத்தில் தொடங்கியுள்ளோம் என்று பெருமிதமாக கூறினார்.
பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணிமண்டபத்தை திறந்துவைக்க டெல்லியிலிருந்து மதுரை வந்தார். தனி விமானம் மூலம் மதுரை வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரத்துக்கு வந்தார்.
பின்னர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணி மண்டபத்தை திறந்து வைத்து, மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில், " இன்று ராமேஸ்வரத்தில், ராமேஸ்வரம்- அயோத்தி புதிய ரயில், ராமேஸ்வரம்- தனுஸ்கோடி வரையில் சாலை, கலாம் நினைவுச் சின்னம், ஆழ்கடல் மீன்பிடி திட்டம் எனப்படும் நீல புரட்சி திட்டம், பசுமை ராமேஸ்வரம் திட்டம் என்று 5 நிகழ்ச்சிகளை திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம். இது மகிழ்ச்சியாக பெருமிதமாக இருக்கிறது." என்று கூறினார்.
மேலும் அவர், " தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு மத்திய அரசு உதவியுள்ளது. சென்னை, கோவை, தஞ்சை உள்ளிட்ட நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி நகரங்களை மேம்படுத்த ரூ4,700 கோடி நிதி உதவி அளித்தோம்.ஸ்மார்ட் நகரங்களில் மின்சாரம், குடிநீர், சுகாதாரம் மேம்படுத்தப்படும்." என்று மோடி தெரிவித்தார்.
" ராமேஸ்வரம் குறிப்பிட்ட மதத்துக்கான பூமி அல்ல. இது ஆன்மீக பூமியாகக் கருதப்படுகிறது. அப்துல் கலாம் போன்ற ஆழந்த சிந்தனையாளரை கொடுத்த பூமிதான் ராமேஸ்வரம்.
கலாம் நினைவு நாளில் இங்கு இருப்பதை, எனது பாக்கியமாக கருதுகிறேன். கலாம் மறைந்தபோது அவருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று அறிவித்தேன். அதன்படி தற்போது கட்டி முடிக்கப்பட்டு இன்று அந்த நினைவுச் சின்னம் திறக்கப்பட்டுள்ளது என்றார் மோடி.