ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: பா.ம.கவும் புறக்கணிப்பு- ராமதாஸ் அறிவிப்பு
கோவை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சி புறக்கணிப்பதாக அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த அண்ணா தி.மு.க.வின் வெற்றிவேல் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து இத்தொகுதியில் அடுத்த மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 3-ந் தேதி தொடங்க உள்ளது. ஆனால் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இவ்வளவு விரைவாக இடைத்தேர்தலை அறிவித்திருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இத்தேர்தலை புறக்கணிப்பதாக திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் கோவையில் தமது கட்சி நிர்வாகிகளுடன் இன்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யமாட்டோம் என்று அண்ணா தி.மு.க. அறிவித்தால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்போம். ஆனால் அண்ணா தி.மு.க., பணப்பட்டுவாடா விவகாரத்தில் அப்படி எந்த ஒரு உறுதிமொழியும் அளிக்காது.
இதனால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சி புறக்கணிக்கிறது. ஊழலை விமர்சிக்கும் டிராபிக் ராமசாமி திமுகவின் ஆதரவைக் கோருவது சரியல்ல. எந்த காலத்திலும் திமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றார்