ஜெ., கருணாநிதி, வைகோ, இடதுசாரி தலைவர்களுடன் பாமக வக்கீல் பாலு திடீர் சந்திப்பு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர்களை பாமக வழக்கறிஞர் பாலு இன்று திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாமக சார்பில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டவர் பாமக வழக்கறிஞர் பாலு. இவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
அதேபோல் பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து தொடர்ச்சியாக அதிமுக, திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தது பாமக.
இந்நிலையில் நேற்று காலை திமுக தலைவர் கருணாநிதியை வழக்கறிஞரும், பாமக செய்தி தொடர்பாளருமான பாலு சந்தித்தாக கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் இடதுசாரி தலைவர்களையும் பாலு சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின் போது பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுத்த கடிதம் ஒன்றை அனைவரிடமும் கொடுத்தாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை 5.35 மணி அளவில் முதலமைச்சர் ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டன் இல்லத்திற்கு திடீரென வந்தார் பாலு. பின்னர் 10 நிமிடங்கள் வரை போயஸ் கார்டனில் காத்திருந்து, பாமக தலைவர் ராமதாஸ் அளித்த கடிதத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.
அந்த கடிதத்தில் மருத்துவ நுழைவு தேர்வு ரத்து, வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தம், காவிரி விவகாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற பிரச்சனைகள் தொடர்பாக அதில் கூறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பாமக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இது போன்று கடிதத்தை பாமக நிறுவனர் அளித்திருப்பது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.