தேர்தல் தோல்வி ஏன்.. வேட்பாளர்களை அழைத்து ஆலோசனை நடத்துகிறது பாமக
சென்னை: பாமக வேட்பாளர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள் கூட்டம் வரும் மே 24ந் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பாமக பெரும் ஏமாற்றத்தையே சந்தித்தது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதேசமயம், காங்கிரஸுக்கு அடுத்த இடத்தைப் பிடித்து தமிழகத்திலேயே நான்காவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் தனது கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை அது கூட்டியுள்ளது. இது தொடர்பாக ஜி.கே மணி வெளியிட்டுள்ள அறிக்கை.
பா.ம.க. வேட்பாளர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள் கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட்டம் வரும் 24 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளன. பா.ம.க. துணைப் பொதுச் செயலாளர்களும், மாவட்ட செயலாளர்களும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.