ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உடனே லோக் அயுக்தா அமைக்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை
தமிழகத்தில் நடைபெறும் ஊழல்களை விசாரிக்க லோக் அயுக்தா அமைப்பை உடனே அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் ஊழல்களையும் முறைகேடுகளையும் விசாரிக்க லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டை அதிர வைத்த குட்கா ஊழல் குறித்து விசாரிப்பதற்காக ஊழல் தடுப்பு-கண்காணிப்புப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், இந்த விசாரணையை கண்காணிக்க முழுநேர கண்காணிப்பு ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு முழு மனநிறைவை அளிக்கவில்லை.
உயர்நீதிமன்றத்தின் ஆணை நல்ல நோக்கம் கொண்டது தான் என்றாலும் ஆட்சியாளர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து தப்பிக்கும் திறமை பெற்றவர்கள். அதனால் தான் சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி நடைபெறும் விசாரணையிலிருந்து குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
டி.ஜி.பி. நிலையில் உள்ள ஒருவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படும் போது அவர் யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக விசாரணை நடத்த முடியும். எனவே, குட்கா ஊழல் குறித்து விசாரிப்பதற்கான சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக டி.ஜி.பி. நிலையில் உள்ள நேர்மையான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை தான் இவை வலியுறுத்துகின்றன. எனவே, தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.