மருத்துவ படிப்பு பிரச்னை தீர்க்க நல்ல சான்ஸ், கைவிட்ராதீங்க... அரசுக்கு ராமதாஸ் அட்வைஸ்!
குடியரசுத் தலைவர் தேர்தலை சாக்காக வைத்து மருத்துவக் கல்வி சார்ந்த விஷயங்களை சாதித்து கொள்ளுங்கள் என்று தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் அறிவுரை கூறியுள்ளார்.
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற தமிழகத்தின் ஆதரவு தேவை என்பதால், அதற்கு இதை நிபந்தனையாக முன்வைத்து மருத்துவக் கல்வி சார்ந்த அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவமனைகளில் இரு ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், இந்திய மருத்துவக் குழுவின் மாணவர் சேர்க்கை விதிகளில் புதிதாகச் சேர்க்கப்பட்ட பிரிவின் அடிப்படையில் 50% இட ஒதுக்கீட்டை சென்னை ஹைகோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்தது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள அனைத்து சிக்கல்களுக்கும் இதுதான் காரணமாகும்.
சற்று அதிகம் கிடைத்திருக்கும்
50% ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டாலும், ஊரகப்பகுதி, மலைப்பகுதி, எளிதில் அணுக முடியாத பகுதி ஆகியவற்றில் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண்களை வழங்கலாம் என்று மூன்றாவது நீதிபதி உத்தரவிட்டார். மருத்துவ மேற்படிப்பில் இடம் வழங்கத் தடை இல்லை என்றும், ஊரகப்பகுதி, மலைப்பகுதி மற்றும் எளிதில் அணுகமுடியாத பகுதிகளை அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். இத்தீர்ப்பை தமிழக அரசு அறிவார்ந்த முறையில் செயல்படுத்தியிருந்தால், அரசு மருத்துவர்களுக்கு இப்போது கிடைத்த அளவுக்கு இடங்கள் கிடைத்திருக்காது என்றாலும், இயல்பாக கிடைப்பதை விட சற்று அதிக இடங்கள் கிடைத்திருக்கும்.
ரத்து
ஆனால், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள அனைத்துப் பகுதிகளையும் ஊரகப்பகுதி, மலைப்பகுதி, எளிதில் அணுக முடியாத பகுதி என அறிவித்து, அங்கு பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண்களை வழங்கியது. இதனால் மொத்தமுள்ள 1066 மாணவர் சேர்க்கை இடங்களில் 999 இடங்கள் அரசு மருத்துவர்களுக்குக் கிடைத்தன. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக்கொண்டுதான், மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக ரத்து செய்துள்ளது.
வாய்ப்பு பாதிப்பு
தமிழக அரசுக்கு கொடுத்த அதிகாரத்தை முறையாகவும், நெறியாகவும் கையாளத் தவறியதால்தான் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது ஊரகப்பகுதி, மலைப்பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளைக் கிட்டத்தட்ட உயர்நீதிமன்றமே அடையாளம் காட்டியிருப்பதால், மருத்துவ மேற்படிப்பில் சேர்க்கப்பட்ட ஊரக மருத்துவர்களில் பலர் தங்களின் வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
மேல்முறையீடு தீர்வு இல்லை
இந்தச் சிக்கலை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஒரே கண் கொண்டுதான் பார்க்கும் என்பதால் மேல்முறையீட்டால் எந்த நன்மையும் விளையும் என்று தோன்றவில்லை; எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற தமிழகத்தின் ஆதரவு தேவை என்பதால், அதற்கு இதை நிபந்தனையாக முன்வைத்து மருத்துவக் கல்வி சார்ந்த அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும், என்று ராமதாஸ் கூறியுள்ளார்.