கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
கொடநாடு காவலாளி கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் காவலாளி கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாமக கேட்டுக் கொண்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் எஸ்டேட்டில் காலாளியாக இருந்த ஓம்பகதூர் கடந்த 24ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் படுகாயங்களுடன் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று போலீசாரின் விசாரணை வளையத்தில் உள்ளார்.
இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் என்று சொல்லப்படும் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த கனகராஜ் நேற்று அதிகாலை சாலை விபத்தில் உயிரிழந்தார்.
மற்றொரு குற்றவாளியான சயனும் பாலக்காடு அருகே கார்விபத்தில் சிக்கினார், இதில் சயான் உயிர் தப்ப அவரது மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்துள்ளது. சயானின் மனைவி மற்றும் குழந்தை விபத்திற்கு 3 மணி நேரம் முன்னரே கழுத்தில் வெட்டுபட்டுள்ளதாக பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு காவலாளி கொலை மர்மம், எஸ்டேட்டில் உள்ள பொருட்கள் ஏதேனும் கொள்ளை போனதா என்பதில் மர்மம், குற்றவாளிகள் அடுத்தடுத்து சாலை விபத்தில் சிக்கியதில் மர்மம் என அடுத்தடுத்து அனைத்துமே மர்மங்களாக உள்ளன.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விபத்தில் சிக்கியது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) April 30, 2017
எனவே கொடநாடு கொலை மற்றும் குற்றவாளிகள் விபத்தில் சிக்கிய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இந்த கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை, போயஸ் தோட்டத்து மாஜி கார் டிரைவர் விபத்தில் சிக்கி பலியானார். தொடர்ந்து அவரது நண்பரும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த சம்பவங்கள் எதிர்கட்சியினரை மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.