முதல் தேர்தலில் சூப்பர் வெற்றி.. இப்போது அதே தொகுதியில் டெபாசிட் காலி.. பரிதாப பாமக!
சென்னை: 1991ம் ஆண்டு தான் சந்தித்த முதல் சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பண்ருட்டி தொகுதியில் வென்றது பாமக. ஆனால் இன்று அதே தொகுதியில் அக்கட்சிக்கு டெபாசிட் பறி போயுள்ளது. வன்னியர் மாவட்டங்களில் பாமகதான் தனிப் பெரும் சக்தி என்ற மாயை உடைந்து சிதைந்திருப்பதையே இது காட்டுவதாக உள்ளது. அதேசமயம், திமுக, அதிமுகவின் வெற்றிவாய்ப்பை இந்த மாவட்டங்களில் பாமக கடுமையாக பாதித்துள்ளது என்பதை மறந்து விடக் கூடாது.
காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், சென்னை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பாமக பலம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஏற்கெனவே நடைபெற்ற தேர்தல்களில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்ததால் பாமகவின் உண்மை நிலை தெரியாமல் இருந்தது. இருப்பினும் வட மாவட்டங்கள் என்றாலே பாமக அங்கு பலமாக இருக்கும் என்ற பிம்பம் இருந்து வந்தது.
ஆனால் உண்மையில் அந்த பிம்பம் எப்படிப்பட்டது என்பதை இந்தத் தேர்தல் காட்டியுள்ளது. தனித்துப் போட்டியிட்ட பாமக தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டுள்ளது.
பல இடங்களில் 3 - 4 தான்
இந்தத் தேர்தலில் வட மாவட்டங்களில் பாமக ஒரு சில தொகுதிகளைத் தவிர பெரும்பாலான தொகுதிகளில் 3வது மற்றும் 4வது இடங்களைத் தான் பெற முடிந்துள்ளது.
அன்புமணிக்கே ஆப்பு
பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் நிச்சயம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு அவர் பரிதாபமாக தோல்வியைத் தழுவியுள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டி
அதேபோல பாமக வலுவாக உள்ள பாப்பிரெட்டி பட்டியிலும் கூட அக்கட்சியால் வெல்ல முடியாமல் போய் விட்டது. பெரும் அதிருப்தி அலை வீசிய போதும் கூட அமைச்சர் பழனியப்பன் அங்கு வென்று விட்டார்.
தர்மபுரியில் 3வது இடம்தான்
தற்போது அன்புமணி எம்.பியாக உள்ள தர்மபுரியில் கூட அக்கட்சியால் முதலிடத்தைப் பிடிக்க முடியவில்லை. 3வது இடமே கிடைத்தது. கள்ளக்குறிச்சியில் விடுதலைச் சிறுத்தைகளை விட குறைவாகப் பெற்று 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டது பாமக.
பண்ருட்டி பரிதாபம்
பண்ருட்டி என்றாலே சுவையான பலாப்பழம் நினைவுக்கு வரும். ஆனால் பாமகவுக்கு அது கசப்பான மாங்காயாகப் போய் விட்டது. இதே பண்ருட்டியில் கடந்த 1991ல் முதல் முறையாக பாமக போட்டியிட்டபோது அபார வெற்றி பெற்றது. ஆனால் இன்று அது டெபாசிட்டை இழந்து நிற்கிறது.
அடப் பாவமே
அதை விட கொடுமை என்னவென்றால் சென்னையில் எழும்பூர், திரு.வி.க நகர், சேப்பாக்கம் - திருவில்லிக்கேணி தொகுதிகளில் நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பாமக பெற்றுள்ளது அக்கட்சியினரை விரக்தி அடைய வைத்துள்ளது.
ஆனால்... 64 தொகுதிகளில் ஆப்பு!
இப்படி ஒரு பக்கம் பரிதாப நிலை இருந்தாலும் கூட 64 தொகுதிகளில் திமுக வெற்றியைப் பதம் பார்த்துள்ளது பாமக. திமுக வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற தொகுதிகளில் பாமகவின் பங்கு கணிசமாக உள்ளதைக் காணலாம்.
வடக்கு மற்றும் மேற்கு
சென்னையை தவிர வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளில் தி.மு.க.வின் வெற்றியை முடக்கியது பாமகதான். இந்த தொகுதிகளில் பாமக பெற்றுள்ள ஓட்டுகளை விட குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே திமுக தோல்வியை சந்தித்துள்ளது.
தேமுதிகவையும் காலி செய்து
அதேபோல வட மாவட்டங்களில் பாமகவின் இடத்தைப் பிடித்து வைத்திருந்த தேமுதிகவையும் இந்தத் தேர்தல் மூலம் விரட்டியடித்துள்ளது பாமக. அந்த வகையில் அதற்கு இந்த தேர்தல் நஷ்டமில்லைதான்.
4-ல் 2... 66-ல் 3
பாமக 4 தொகுதிகளில் 2வது இடத்தையும், 66 தொகுதிகளில் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த தொகுதிகளில் பாமக பிரித்த ஓட்டுகள் திமுகவை காலி செய்துள்ளது.