அந்த "குடி" உயர்வதை விரும்புகிறதே இந்த அரசு... பாமக வக்கீலிடம் வேதனைப்பட்ட கமல்ஹாசன்!
நடிகர் கமல்ஹாசனை பாமக வழக்கறிஞர் பாலு இன்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது அரசுகள் குடிகாரர்கள் எண்ணிக்கை உயருவதையே விரும்புவதாக வேதனையை வெளிப்படுத்தினார்.
சென்னை: ஒளவையார் குடி உயர கோல் உயரும் என்று சொன்னார்... இங்கே அந்த "குடி" உயருவதையே அரசு விரும்புகிறது என தம்மை சந்தித்த பாமக வழக்கறிஞர் பாலுவிடம் வேதனையுடன் கூறினார் நடிகர் கமல்ஹாசன்.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை ஏற்று மாநில அரசுகள் கணிசமான அளவில் கடையை மூடிவிட்டன.
ஆனால் தற்போது நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக அறிவித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை காற்றில் பறக்கவிடும் முயற்சியில் மாநில அரசுகள் இறங்கியுள்ளன. இதனைத் தடுக்கும் வகையில்தான் இன்று மு.க.ஸ்டாலின், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோரை பாமக வழக்கறிஞர் பாலு சந்தித்தார்.
நடிகர் கமல்ஹாசனை வழக்கறிஞர் பாலு அவரது வீட்டில் இன்று பிற்பகல் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது குடி உயர கோல் உயரும் என அன்று ஒளவையார் கூறியிருந்தார். ஆனால் தற்போதைய அரசுகளோ குடிகாரர்கள் எண்ணிக்கை உயர வேண்டும் என்றே விரும்புகின்றன என வேதனையை வெளிப்படுத்தினாராம்.
மேலும் சாமானிய மக்களின் வருவாயைப் பறித்து அவர்களுடைய உடல்நலத்துக்கும் தீங்கை ஏற்படுத்துகிறது இந்த அரசு என்றும் குமுறினாராம் கமல்ஹாசன். நடிகர்களை வேண்டாம் என வெறுக்கும் பாமக, கமல்ஹாசனோடு இணக்கம் காட்டுவது அரசியலில் ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.