66 வயதான திமுக, 44 வயதான அதிமுகவுக்கு தனித்துப் போட்டியிடத் தைரியம் இல்லை: அன்புமணி தாக்கு !
நாமக்கல்: பெண்கள், இளைஞர்களை நம்பியே வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறோம். ஆனால், 66 வயதான திமுகவுக்கும், 44 வயதான அதிமுகவுக்கும் தனித்துப் போட்டியிடத் தைரியம் இல்லை என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி கூறியுள்ளார்.
நாமக்கல்லில் மாவட்ட பாமக மகளிர் சங்கம் சார்பில், நேற்று நடைபெற்ற மது ஒழிப்புப் போராட்டத்தில் பாமகவின் முதல்வர் வேட்பாளரும், தருமபுரி மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தின் ஓராண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி. இதில், ரூ. 36 ஆயிரம் கோடி மதுபானத்தில் இருந்து கிடைக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கோடி மதுபானம் மூலம் வருமானம் கிடைத்துள்ளது. இதில், அரசுக்கு ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி வருமானம் சேர்ந்துள்ளது. மீதமுள்ள ரூ. 70 ஆயிரம் கோடி திமுக, அதிமுகவினர் நடத்தும் மதுபான தொழில்சாலை அதிபர்களுக்குக் கிடைத்திருக்கிறது. மதுவை ஒழிக்க பாமகவால் மட்டுமே முடியும்.
மணல், கிரானைட், மின் துறை மூலம் வரும் ரூ. 84 ஆயிரம் கோடி வருமானத்தால், மது இல்லாத அரசை நடத்தலாம். பெண்கள், இளைஞர்களை நம்பியே வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறோம். ஆனால், 66 வயதான திமுகவுக்கும், 44 வயதான அதிமுகவுக்கும் தனித்துப் போட்டியிடத் தைரியம் இல்லை. இன்னும் 2 மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாமகவுக்கு வாக்களித்து, தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என்றார்.