தேர்தலுக்குத் தேர்தல் தொகுதி தாவும் விஜயகாந்த்தை வீழ்த்துவேன்.. பாமக பாலு அதிரடி
சென்னை: உளுந்தூர்ப்பேட்ட தொகுதியில் பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் பாலு, அத்தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜயகாந்த்தை வீ்ழ்த்த இது தனக்குக் கொடுக்கப்பட்ட நல்ல வாய்ப்பு. விஜயகாந்த்தை வீழ்த்துவேன் என்று கூறியுள்ளார்.
உளுந்தூர்ப்பேட்டையில் முதலில் பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ராமமூர்த்தி. தற்போது அவரைத் தூக்கி விட்டு பாலுவை நிறுத்தியுள்ளது பாமக. காரணம், இத்தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுவதால் அவரை எதிர்க்க வலுவான வேட்பாளராக போட திட்டமிட்டது பாமக. இதனால்தான் பாலுவை களம் இறக்கியுளளது.
இதுகுறித்து பாலு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் தோற்கப்போவது உறுதி. அவரை தோற்கடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு தொகுதியாக விஜயகாந்த் மாறிக் கொண்டிருக்கக் கூடிய காரணத்தை உளுந்தூர்பேட்டை தொகுதி மக்களிடம் எடுத்துச் சொல்லப் போகிறேன். முதலில் விருத்தாசலத்தில் போட்டியிட்டார். அடுத்து ரிஷிவந்தியத்தில் போட்டியிட்டார். இப்போது உளுந்தூர்பேட்டை வருகிறார்.
ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக செயல்படாத விஜயகாந்த், குறைந்தபட்சம் தன்னுடைய தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு பிரதிநிதியாக செயல்பட்டிருந்தால் அதே தொகுதியில் அவர் போட்டியிட்டிருப்பார். இப்போது வேறு தொகுதியை மாற்றியிருக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டையில் வெற்றி பெற்றேன் என்று சொல்லிவந்த விஜயகாந்தை தோற்கடிக்க எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒட்டு மொத்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. டாக்டர் ராமதாஸுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
விருத்தாச்சலத்தில் சினிமா மாயை காரணமாக வெற்றி பெற்றார் விஜயகாந்த். அதிமுக உதவியால் ரிஷிவந்தியத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இப்போது அவருக்கு சினிமா மாயை உதவாது. அவரை வீழ்த்த நாங்கள் தயராக இருக்கிறோம் என்றார் பாலு.