முழு மதுவிலக்கு கோரி பாமக மவுன விரதம்... போலீஸ் அனுமதி மறுப்பால் ஒத்தி வைப்பு
சென்னை: முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரி பாமக சார்பில் அறிவிக்கப்பட்ட மவுன விரதத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. இதனால் இந்தப் போராட்டத்தை பாமக ஒத்தி வைத்துள்ளது.
அதிக அளவு மது பழக்கத்தால் தமிழகத்தில் நோய்கள் அதிகரித்து வருகின்றன என்றும் இதனால் பெருமளவில் இளம் விதவைகள் உருவாகியுள்ளனர் என்றும் இதற்கெல்லாம் காரணம் மதுதான் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். அழிவை ஏற்படுத்தும் இந்த மதுவை தமிழகத்தில் இருந்து முழுவதுமாக ஒழிக்க காந்தியின் பிறந்த நாளான அக். 2ம் தேதி அன்று மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையின் அருகில் பாமக சார்பில் மவுன விரதம் இருக்கப் போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்பதால் நாளை நடைபெற இருந்த மவுன விரதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாமக அறிவித்துள்ளது. அடுத்ததாக எந்த நாளில் மவுன விரதம் நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.