கோவையில் 3 பேர் படுகொலை - பாமக மாநிலத் துணைத்தலைவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
கோவை: கோவையில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 21 பேர் மீது குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பா.ம.க மாநிலத் துணைத் தலைவர் உள்ளிட்ட 6 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம், மருத்துவக்குடியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். இவர் பா.ம.க மாநிலத் துணைத் தலைவராக உள்ளார். இவரது சகோதரர் வழக்கறிஞர் ம.க.ராஜா கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருவிடைமருதூர் காவல் துறையினர் லாலி மணிகண்டன், ராமராஜன் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலி மணிகண்டன், கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி பிணையில் வெளியே வந்தார். அவரை அழைத்துச் செல்வதற்காக அவரது சகோதரர் மாதவன், அருண், தியாகு (எ) தியாகராஜன், ரவி, கார்த்தி, மணி, மணிகண்டன் ஆகியோர் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு வாடகை காரில் வந்தனர். காரை அதன் உரிமையாளர் ரவி ஓட்டி வந்தார்.
லாலி மணிகண்டனை அழைத்துக் கொண்டு அன்று இரவு ஊர் திரும்பினர். கோவை, சிந்தாமணிப்புதூரை அருகே சிக்னலில் கார் நின்றிருந்தபோது, மற்றொரு காரில் வந்த மர்மக் கும்பல், ரவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அருண், மாதவன், தியாகு (எ) தியாகராஜன் ஆகியோரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் சரணடைந்தனர். இந்த வழக்கை சூலூர் காவல் துறையினர் விசாரித்து வந்தனர். கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டது.
கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.கிருஷ்ணமூர்த்தி, 45 சாட்சிகளின் வாக்கு மூலங்கள் உள்ளிட்ட சுமார் 60 ஆவணங்களை கோவை 7 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மேலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 15 பேரைத் தவிர்த்து, பா.ம.க. மாநிலத் துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின், திண்டுக்கல் மோகன்ராம், சந்தோஷ், மோகன், சுரேந்தர், சிங்காரம் ஆகிய 6 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைதானவர்கள், தேடப்படுபவர்கள் ஆகியோர் மீது கூட்டுச் சதி, கொலை முயற்சி, கொலை, கலவரம் விளைவிப்பது, சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருப்பது உள்ளிட்ட 7 பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதை அடுத்து தலைமறைவு குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.