பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா? பிப்.15-ல் முடிவு: டாக்டர் ராமதாஸ்
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பது குறித்து அடுத்த மாதம் 15-ந் தேதி நடைபெறும் தமது கட்சியின் செயற்குழுவில் முடிவெடுக்கப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று கோகுல மக்கள் கட்சி சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரி உண்ணாவிரதப் போராட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் டாக்டர் ராமதாசிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:
கே: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள்?
ப: நான் ஏற்கனவே சொன்ன பதிலைதான் இப்போதும் சொல்கிறேன். யாருக்கும் ஆதரவு இல்லை. தேர்தலில் போட்டியிடவும் இல்லை.
கே: அப்படியானால் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா?
ப:- சேலத்தில் பிப்ரவரி 15-ந் தேதி நடைபெறும் பா.ம.க. செயற்குழுவில் இது பற்றி முடிவு செய்கிறேன்.
கே: 2016-ல் நீங்கள் யாருடன் கூட்டணி அமைப்பீர்கள்?
ப:- தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத மாற்று கூட்டணி, புதிய கூட்டணி அமைப்போம்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.