கால்வாய் பாலம் உடைப்பு - அதிகாரிகள் அலட்சியத்தால் பொது மக்கள் அவதி
நெல்லை அருகே கால்வாய் பாலம் உடைந்துள்ளதால் பொதுமக்கள் கால்வாயை கடக்க முடியாமல் அவதி பட்டு வருகின்றனர்.
நெல்லை: நெல்லை அருகே கால்வாய் பாலம் உடைந்துள்ளதால் பொதுமக்கள் கால்வாயை கடக்க முடியாமல் அவதி பட்டு வருகின்றனர். இதனால் கழுத்தளவு தண்ணீரில் மக்கள் நீந்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள மேலகூனியூர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் விவசாய நிலங்கள், களத்து மேடு, மாயனம் போன்றவை அங்குள்ள கன்னடியன் கால்வாய் மறுபக்கம் உள்ளது.
பொதுமக்கள் கால்வாயை கடப்பதற்கு எதுவாக பொதுப்பணித்துறை மூலம் சிறு பாலம் கட்டப்பட்டிருந்தது. இந்த பாலத்தின் வழியாக மட்டுமே விவசாயிகள் நிலங்களுக்கு செல்லவும், இறந்தவர்களை இடுகாட்டுக்கு எடுத்து செல்லவும் முடிந்தது.
இந்நிலையில் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலம் இடிந்து விட்டது. இதனால் கழுத்தளவு தண்ணீரில் மக்கள் நீத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து விவசாயிகள் தங்கள்நிலத்துக்கு செல்ல பனை மரத்தடியை கொண்டு தற்காலிக பாலம் அமைத்து கால்வாயை கடந்து வந்தனர். தற்போது அந்த பனைமரமும் உடைந்துவிட்டதால் கால்வாய்க்குள் இறங்கி செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இதுகுறித்து கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் சுணக்கம் காட்டி வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.