ஆதார் எண்ணை இணைப்பதில் குளறுபடி.... திண்டாடும் ரேஷன் கடை ஊழியர்கள்
திருநெல்வேலி: ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வகையில் தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் புதிய அதி நவீன கருவி வழங்கி வருகிறது. அப்படி நெல்லையில் உள்ள சில ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்ட கருவிகள் பழுதடைந்துள்ளால் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் புதிய கருவி ஒன்று ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. ஜிபிஎஸ் தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த அதி நவீன கருவிகளில் அனைத்து ரேஷன் கார்டுகளின் விவரங்கள், செல்போன் விவரங்கள், ஆதார் எண் போன்றவை பதிவு செய்ய ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, நெல்லை மாவட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் பற்றிய அனைத்து தகவல்களையும் கடை ஊழியர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சில கடைகளில் புதிதாக வழங்கப்பட்ட நவீன கருவி வேலை செய்யவில்லை. இதனால் கடை ஊழியர்கள், ரேஷன் கார்டு வைத்திருப்போரிடம் இருந்து வெறும் செல்போன் நம்பரை மட்டும் பெற்றுக் கொண்டு அனுப்பி விடுகின்றனர். ஆனால் ஆதார் எண்ணை பதிவு செய்ய மக்கள் திரும்ப திரும்ப ரேஷன் கடைகளுக்கு சென்று வர வேண்டியுள்ளது. பல முறை கடைக்கு வந்து சென்றாலும் இன்னும் குளறுபடி சரியாக வில்லை என்றே கடை ஊழியர்கள் சொல்லி வருவதால் மக்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் இடையே பிரச்சனை உருவாகி வருகிறது.
மேலும் ஆதார் எண்ணுக்காக பதிவு செய்து அட்டை பெறாமல் ரசீது மட்டும் வைத்திருப்பவர்களின் பாடும் திண்டாட்டம்தான். அந்த ரசீதில் உள்ள பார்கோடுகளும் கடை ஊழியர்களால் அந்தக் கருவியில் ஸ்கேன் செய்ய முடியவில்லை. இதுபோன்ற பல பிரச்சனைகளால் ரேஷன் கடை ஊழியர்கள் திண்டாடி வருகின்றனர்.