பசுபதி பாண்டியன் வக்கீலை போட்டுத் தள்ள வந்த வாலிபர்.. துப்பாக்கியுடன் தூக்கிய போலீஸ்
நெல்லை: பசுபதி பாண்டியன் ஆதரவு வக்கீலை கொல்ல திட்டமிட்டதாக பகீர் தகவலை கேரளாவில் பிடிபட்ட நெல்லை வாலிபர் தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் அதிர்ச்சியில் உள்ளனர்.
நெல்லை அருகே வடக்கு தாழையூத்து சர்ச் தெருவை சேர்ந்தவர் பிரவீன் ராஜ். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் கேரளாவுக்கு அரசு பஸ்சில் சென்றார். தமிழக எல்லையான களியாக்கவிளை அருகே அமரவிளை சோதனை சாவடியில் இருந்த போலீசார் பஸ்சில் சோதனை நடத்தினர்.
அப்போது பிரவின் குமார் பையில் துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பாறசாலை காவல் நிலையத்தில் ஓப்படைக்கப்பட்டார். இவர் மீது சீவலப்பேரி, பாளை உள்ளிட்ட காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜாமீனில் வந்த அவர் பின்னர் தலைமறைவாகி விட்டார். சென்னை அண்ணாநகரில் பசுபதி பாண்டியன் ஆதரவு வக்கீலை கொல்ல திட்டமிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சென்னை அண்ணா நகரில் பசுபதி பாண்டியன் ஆதரவு வக்கீலை கொல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்போது அவர் போலீசிடம் சிக்கி விட்டார். தற்போது பசுபதி பாண்டியன் ஆதரவு வக்கீல் திருவனந்தபுரத்தில் இருக்கிறார்.
இதையடுத்து அவரை தீர்த்து கட்ட துப்பாக்கியுடன் சென்றிக்கிறார் பிரவீன் ராஜ். காரில் சென்றால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதற்காக பஸ்சில் சென்றுள்ளார். துப்பாக்கியில் 6 தோட்டாக்கள் லோடு செய்து வைத்திருந்தார். மேலும் 6 தோட்டாக்கள் பையில் வைத்திருந்தார். வாகன சோதனையில் எங்களிடம் பிடிபட்டு விட்டார் என்றனர்.