போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி.. இளைஞர் மண்டை உடைப்பு
போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து கோவையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் இளைஞர் ஒருவரின் மண்டை உடைந்து படுகாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்களை போலீசார் தடியடி செய்து கலைத்தனர். இதனைக் கண்டித்து கோவையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை போலீசார் மீண்டும் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இதில் ஒருவருக்கு மண்டை உடைந்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை, மதுரையில் நடைபெற்றது போன்றே கோவையிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடைபெற்றது. அவர்கள் மீது இன்று போலீசார் தடியடி நடத்தியும் குண்டுக்கட்டாக தூக்கியும் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதனைக் கண்டித்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள், மாணவர்கள், இளைஞர்கள் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தை நிறுத்தி விட்டு கலைந்து போகும் படி போலீசார் பேச்சவார்த்தை நடத்தினார்கள். இந்தப் பேச்சுவார்த்தையை மாணவர்கள் ஏற்க மறுத்தனர்.
இதனையடுத்து, பெண்கள், மாணவிகள் என்றும் பாராமல் போலீசார் அவர்களை ஓட ஓட அடித்தனர். மேலும், கடைகளில் பதுங்கி இருந்த பெண்களைக் கூட வெளியே இழுத்து வந்து போலீசார் அடித்து உதைத்தனர்.
மேலும், இளைஞர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை போலீசார் நடத்தினர். இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீஸ் தாக்குதலில் அந்தோணி செல்வம் என்பவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் பலருக்கு மண்டை உடைந்து படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.