டாஸ்மாக் கடைக்கு பூட்டுபோட்ட கடையநல்லூர் எம்.எல்.ஏ., உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட கடையநல்லூர் எம்எல்ஏ உள்ளிட்ட 25 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
செங்கோட்டை: பொதுமக்களுக்கு இடையூராக உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய கடையநல்லூர் எம்எல்ஏ அபுபக்கர் உள்ளிட்ட 25 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர்-பண்பொழி சாலையில் தனியார் பள்ளி, மசூதி ஆகியவை அமைந்துள்ள பகுதியில் மாநில சாலையை ஒட்டிய பகுதியில் அரசு டாஸ்மாக் கடை கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தக்கடை அமைக்கும் போதே இதற்கு இந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் அதற்கு செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் முதல் தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட டாஸ்மாக் கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பிற பகுதிகளிலும் இருக்கும் டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக கடையநல்லூர்-பண்பொழி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் தலைமையில் 100க்கும் மேற்ப்பட்டவர்கள் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அரசு டாஸ்மாக் கடைக்கு பூட்டுபோட்ட சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் உள்ளிட்ட 25 பேர் மீது கடையநல்லூர் போலீசில் டாஸ்மாக் கடை ஊழியர் அபூபக்கர் பாதுஷா புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.