உயர் அதிகாரி திட்டியதால் அரியலூரில் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை… உறவினர் சாலை மறியல்!
அரியலூர்: போலீஸ் உயர் அதிகாரி திட்டியதால் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரியலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த புதுச்சாவடி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற சப். இன்ஸ்பெக்டர் ராஜகோபாலனுக்கு தனபால் (23) என்ற மகன் உள்ளார். திருமணம் ஆகாத இவர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். பின்னர் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி அலுவலகத்தில் காவலராக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சாராய வியாபாரி ஒருவரிடம் தனபால் மாமுல் வாங்கி இருப்பதாக ஜெயங்கொண்டம் டிஎஸ்பி இனிக்கோ திவ்யனிடம் புகார் ஒன்று தொலைபேசியில் வழியாக வந்துள்ளது.
இதனையடுத்து, டிஎஸ்பி இனிக்கோ திவ்யன், தனபாலை கூப்பிட்டு விசாரணை நடத்தினார். மேலும், தனபாலை திருச்சிக்கு மாற்றல் செய்யப் போவதாகவும் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு தனபால் ஆளானதாக கூறப்படுகிறது. இந்த மனநிலையுடன் வீட்டுக்கு சென்ற தனபால் வீட்டில் யாரிடமும் சரியாக பேசவில்லை. பின்னர், காவல் நிலையத்தில் நடந்தவற்றை அவரது தந்தையிடம் தெரிவித்துவிட்டு தூங்கிவிட்டார் தனபால்.
வழக்கம் காலையில் எழுந்து பார்த்த போது தனபால் வீட்டில் இல்லை. வீட்டைச் சுற்றி தேடிய போது, வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள கொட்டகையில் தனபால் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது. இதைகண்ட அவரது தந்தை ராஜகோபாலன் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
தனபால் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு தனபால் உடலுடன் ஜெயங்கொண்டம் - சிதம்பரம் செல்லும் புதுச்சாவடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலையவில்லை. மேலும் தனபால் சாவிற்கு காரணமான ஜெயங்கொண்டம் டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எஸ்.பி, கலெக்டர் வந்து இதுகுறித்து உத்தரவாதம் அளித்தால்தான் போராட்டத்தை கை விடுவோம் என்றும் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் மறியலால் ஜெயங்கொண்டம் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.