காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு...ரயில் முன் பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை.. விஷம் குடித்து இறந்த காதலி!
கடலூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த காவலர் ரயில் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
கடலூர்: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸ்காரர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார், அவரது காதலியும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடலூர் அருகே கோண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிபாலன் மகன் குணா என்கிற தர்மன். ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வந்த 26 வயது தர்மன் தற்போது ரயில்வே போலீசில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த வியாழனன்று பகல் 12 மணியளவில் தர்மன், கோண்டூர் ரயில்வே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த சோழன் விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் கோட்ட ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் தர்மன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். கோண்டூர் கிராமத்தை சேர்ந்த பிஎஸ்சி பட்டதாரிப் பெண் கயல்விழியும் தர்மனும் உறவினர்கள், இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு கயல்விழியின் 2 சகோதரர்களும், பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கயல்விழியின் சகோதர்கள், தர்மனை பலர் முன்னிலையில் தெருவில் வைத்து எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே கயல்விழி காதலனுக்காக சகோதரர்களை எதிர்ப்பதா அல்லது காதலை விட்டுக்கொடுப்பதா என்ற மன உளைச்சலுக்கு அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். இதனையடுத்து கயல்விழி சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தத் தகவலைக் கேட்டு மனஉளைச்சலில் இருந்த தர்மன் 12 மணியளவில் ரயில் முன்பு பாய்ந்துள்ளார். இதில் மண்டையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே தர்மன் உயிரிழந்தார். இதனிடையே மேல்சிகிச்சைக்காக புதுவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கயல்விழியும் வியாழனன்று மாலையில் உயிரிழந்தார்.