மெரினாவை ஒட்டியுள்ள குடியிருப்பு ஏரியாக்களில் போலீஸ் இன்றும் தேடுதல் வேட்டை.. பெண்கள் குமுறல்
சென்னை: ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்களை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வீடு வீடாக சோதனைபோட்டு வருவதால் சென்னை திருவல்லிக்கேணி பகுதி பெண்கள் குமுறுகிறார்கள்.
சென்னை மெரினாவில் நேற்று காலை ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்களை தடியடி நடத்தியது காவல்துறை. இதன்பிறகு ஆங்காங்கு கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறின.
ஐஸ்ஹவுஸ் காவல் நிலையம், விஷமிகளால் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை போர்க்களமானது. போலீசார்-போராட்டக்காரர்கள் மோதிக்கொண்டனர்.
திருவல்லிக்கேணி பகுதியில் நுழைந்த போலீசார் குடியிருப்பு பகுதி என்றும் பாராமல் அத்துமீறி வீடுகளுக்குள் நுழைந்து சோதனை நடத்தினர். வாகனங்களை தங்கள் லத்தியால் அப்போது அவர்கள் வேண்டுமென்றே சேதப்படுத்திய காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
இந்நிலையில், இன்று இரவும் சென்னையில் வீடு வீடாக போலீஸ் தேடுதல் தொடர்கிறது. ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி, சிவராஜபுரம், மாட்டாங்குப்பம், நடுக்குப்பத்தில் தேடுதல் நடத்தி வருகிறார்கள். இதனால் ஆண்கள் அஞ்சி வீடுகளுக்கு திரும்பவில்லை. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை போலீசார் மிரட்டி வருவதால் பெண்களும், குழந்தைகளும் அஞ்சி கதறுகிறார்கள்.
போலீசார் நடவடிக்கை குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையிலும், இப்படிப்பட்ட தேடுதல்கள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.