தீ வைப்பு, கலவரத்திற்கு காரணம் மாணவர்கள், இளைஞர்கள் இல்லை - காவல்துறை
கல்வீச்சு, கலவரத்திற்கு காரணம் மாணவர்கள் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஜல்லிக்கட்டுக்காக கடந்த ஒருவாரமாக மாணவர்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இன்று வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். மெரீனா கடற்கரைக்கு வரும் அனைத்து சாலைகளும் போலீசாரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இன்று காலையில் இருந்தே மெரீனா கடற்கரையில் பதற்றம் தொற்றிக்கொண்டது. மெரீனா கடற்கரையை நோக்கி பேரணியாக வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதில் சிலர் கல்வீசவே போலீசார் காயமடைந்தனர். கல்வீச்சு சம்பவத்தில் போலீஸ் ஆய்வாளர் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. ஒருவரின் மூக்கில் காயம் ஏற்பட்டது.
அவ்வை சண்முகம் சாலையில் குவிக் கப்பட்டிருந்த போலீசாரும் தங்கள் கைகளில் தடி எதுவும் இல்லாமல் இருந்தனர். போலீசாரிடம் ஆயுதம் இல்லை என்பதை அறிந்த அந்த மர்ம கும்பல் போலீசாரை நோக்கி சரமாரியாக கற்களை வீசினார்கள்.
இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தியதில் மாணவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் சென்னை திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ் பகுதி போர்க்களமானது.
சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் போலீஸ் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் சாலை மறியல் நடைபெற்றது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் 5 முறை கண்ணீர் புகைகுண்டுகளை வீசி உள்ளனர். வானை நோக்கிய துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் இந்த கல்வீச்சு, காவல்நிலையம் தீவைப்பு அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்திற்கு காரணம் மாணவர்கள் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஊடுருவிய தேச விரோத சக்திகளே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கை :
போராட்டக்காரர்களை வெளியேற்ற அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறி வருகிறோம். வலுக்கட்டாயமான நடவடிக்கை என்று கூறுவதே தவறு.
நேற்று இரவு, போராட்டக்காரர்களிடம், அவசரச் சட்டம் குறித்த நகலையும் அளித்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தோம். அப்போது காலைக்குள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாகக் கூறினார்கள்.
அதே போல, இன்று காலையும் வெளிச்சம் வந்த பிறகு அவசரச் சட்டம் குறித்து எடுத்துக் கூறி போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினோம். தொடர்ந்து அமைதியான முறையில் வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்னமும் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசி வருகிறோம் என்று கூறினார்கள்.
போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, காவலர்கள் யாரிடமும் தடி கொடுக்கப்படவில்லை. இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட வாய்ப்பே இல்லை. அவர்கள் மீது தடியடி நடத்தக் கூடாது என்பதே முக்கிய உத்தரவு என்று கூறினார்.
காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த காவல்துறையினர், போராட்டக்காரர்களிடம் தொடர்ந்து பேசுவோம். முடிந்தவரை சந்தேகங்களை தெளிவுபடுத்துவோம். அலங்காநல்லூரில் கூட போராட்டங்கள் முடிவுக்கு வந்து, ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவிப்போம் என்று கூறியுள்ளனர்.