தலைமைச் செயலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போலீசார் குடும்பத்தினர் கைது- வீடியோ
போலீசாரின் பல்வேறு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி போலீசாரின் குடும்பத்தினர் தலைமைச் செயலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டனர்.
சென்னை: தலைமைச் செயலக வளாகத்தை முற்றுகையிட்ட போலீசார் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் காவல்துறையினர் குடும்பத்தினர் பல ஆண்டு கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமானால், கோட்டையை முற்றுகையிட வேண்டும் என்று தகவல் பரப்பி வந்தனர்.
அதனால் இன்று தலைமைச் செயலகத் வளாகத்தில் அதிக அளவிலான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால், அதையும் மீறி போலீசார் குடும்பத்தினர் தலைமை செயலக வளாகத்தில் முற்றுகையிட்டனர். போலீசார் 24 மணிநேரம் வேலை பார்த்தாலும் குறைவான சம்பளமே கிடைக்கிறது என பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். ஆனால் அந்த கோரிக்கையின் மீது இதுவரை தீர்வு காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.