ரியல் எஸ்டேட் தகராறால் ஓசூர் சர்வேயர் எரித்துக் கொலையா...?
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சர்வேயர் குவளைச் செழியன் காரோடு தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகே தீக்காயத்துடன் சிக்கிய நபருக்கு பலத்த பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கலைவாணன் என்ற பெயரை உச்சரித்துக் கொண்டிருப்பதால் இந்தக் கொலை வழக்கில் அவருக்கு முக்கியத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஓசூர், ராயக்கோட்டை சாலையில் உள்ள திரிவேணி கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் குவளை செழியன் (42). இவர் ஓசூர் நகராட்சியில் சர்வேயராக இருந்து வந்தார். கடந்த 26ம் தேதி குவளை செழியன், தனது சொகுசு காரில் வெளியே புறப்பட்டார். ஆனால் திரும்பி வரவில்லை.
அன்று மாலை அவர் தனது மனைவி ரேவதிக்குப் போன் செய்தார். அதில், என்னை ஒரு கும்பல் கடத்தியுள்ளது. அவர்களுக்கு ஐம்பது லட்சம் பணம் கொடுக்கவேண்டும், நீ பணத்தை தயார் செய்து வை என்று தகவல் கூறியுள்ளார். இதனால் மனைவி ரேவதி அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு காலையில் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகர் பகுதியிலுள்ள வேப்படியாறு சாலையோரம் தீ வைக்கப்பட்ட காருக்குள் உடல் துண்டு துண்டான நிலையில், பாதி எரிந்த நிலையில் குவளை செழியன் கொலையாகிக் கிடந்தார்.
அந்தப் பகுதி மக்கள் காரைச் சூழ்ந்து பார்த்தபோது உள்ளே கிடந்த உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த இடத்திற்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் தீக்காயத்துடன் ஒரு நபர் கிடப்பதையும் பார்த்தனர். அவர் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது. போலீஸார் தகவல் கிடைத்து வந்து குவளை செழியனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்காயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்த நபரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அந்த நபர், ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் சக்திவேல் (36) எனத் தெரியவந்தது. சக்திவேல் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்குப் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சக்திவேல் கலைவாணன் என்ற பெயரை தொடர்ந்து கூறி வருகிறார். அவர் இந்தக் கொலை செய்த நபரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கலைவாணன் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருவதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவருக்கும், குவளை செழியனுக்கும் புரோக்கர் போல செயல்பட்டு வந்துள்ளார் சக்திவேல். குவளை செழியன் விவகாரத்தில் கலைவாணனுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.