தேர்தல் பாதுகாப்பு... பழைய குற்றவாளிகள் 8000 பேரை பிடித்தது போலீஸ்!
கோவை: சட்டசபைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஒன்றாக, பழைய குற்றவாளிகள் 8000 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
கோவை வந்த அவர் அங்கு மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சைலேந்திர பாபு பேசினார். அவர் கூறுகையில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்புக்கு இதுவரை என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது? என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கோவை, நீலகிரி எல்லைகளில் மாவோயிஸ்டு நடமாட்டம் இருக்கலாம் என கருதப்படுவதால் இங்கு சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த 3 படையினர் நிரந்தர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சென்னை தவிர தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார், துணை ராணுவம், முன்னாள் ராணுவ படையினர் உள்பட 1 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 3500 இடங்கள் பதட்டமான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தமிழகம் முழுவதும் அனுமதி பெற்று 22 ஆயிரம் பேர் துப்பாக்கிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 20 ஆயிரம் பேர் துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பழைய குற்றவாளிகள் 8 ஆயிரம் பேரை பிடித்து ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர் என்றார் சைலேந்திர பாபு.
சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக திரிபாதி இருந்து வந்தார். அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அவரை மாற்றி விட்டு சைலேந்திரபாபுவை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.