போலீஸ் அராஜகம்... வன்முறையை படம் பிடித்த ரிப்போர்டர்கள் மீது தாக்குதல், மண்டை உடைப்பு
பொதுமக்களின் சொத்துக்களுக்கு தீ வைத்து சேதம் விளைவித்த போலீசாரின் தவறுகளை படம் பிடித்த செய்தியாளர்களை அடித்து மண்டையை உடைத்து கேமராக்களை சேதப்படுத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு தடையை நீக்க நிரந்தரமான சட்டம் கொண்டு வர வலியுறுத்தி மெரினாவில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களை போலீசார் நேற்று காலை வலுகட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளு தடியடியாக மாறி கலவரமானது. இதனால், மாணவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
இதைக் கண்டித்து பல கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் மெரினா நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். இதனால் மெரினாவுக்குள் வரும் 7 வழிகளிலும் போலீசார் பல தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். அங்கு வந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து நடுக்குப்பம் பகுதியில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். அங்கு சாலைகளில் நின்ற பெண்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார், சாலைகளில் வைத்திருந்த கடைகளை தூக்கி வீசினர்.
காவல்நிலையம் தீ வைப்பு
சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் காவல்துறை வாகனத்திற்கு அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்து எரித்தனர். இதனால் மேலும் பதற்றமானது.
இதனை புகைப்படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் செய்தியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர்.
போலீஸ் தடுப்பு
கலவரத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம், வீடியோ எடுக்க விடாமல் போலீசார் தடுத்தனர். சமூக விரோதிகள் கற்களை வீசவே, காவல்துறையினரும் கற்களை குவித்து வைத்து கற்களை வீசினர். இதனை செய்தியாளர்கள் படம் பிடித்தனர். அப்போது செய்தியாளர்களை போலீசார் விரட்டி அடித்தனர். ஊடக நிறுவனத்தின் அடையாள அட்டையை காண்பித்த பின்னரும் கண்மூடித்தனமாக போலீசார் தாக்குதல் நடத்தினர்.
|
கேமராமேன் மண்டை உடைப்பு
இதில் பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர் சுரேந்திரன் என்பவருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டும் நிலையில், அவர் தனது அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அதை ஏற்றுக்கொள்ளாத போலீசார் அதனை ஏற்காமல் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
போலீசுக்கு கண்டனம்
இதேபோல் தினகரன் நாளிதழ் கேமராமேன் அருண் , தீக்கதிர் கேமரா மேன் லட்சுமி காந்த் பாரதி என்பவரையும் கண்மூடித்தனமாக போலீசார் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசாரின் இந்த தாக்குதலை பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும், ஊடக நிறுவனங்களும் வன்மையாக கண்டித்துள்ளன.
தீவைத்த போலீஸ்
கலவரத்தின் போது குடிசைக்கும், ஆட்டோக்களுக்கும் போலீசாரே தீ வைத்தனர், போராட்டக்காரர்களின் பைக்குகளை உடைத்தனர். இவை வீடியோ ஆதாரங்களுடன் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இயல்பு நிலை திரும்பும்
சென்னையில் நேற்று மட்டும் வரலாறு காணாத அளவில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் நகர் முழுவதும் போலீசாரின் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டன, எனினும் விடிய விடிய பதற்றமான சூழ்நிலையே காணப்பட்டது. இன்று இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.