கொந்தளிப்பில் கதிராமங்கலம்.. போராடும் மக்களை தடியடி நடத்தி விரட்டிய போலீஸால் பதட்டம்
தஞ்சாவூர்: கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஒரு மாதத்துக்கும் மேலாக கதிராமங்கலம் மக்கள் தொடர்ந்து ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும், குழாயில் இருந்து எண்ணெய் கசியும் இடங்களில் புகை வருவதாகவும் அவர்கள் தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கதிராமங்கலத்தை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி பொதுமக்கள் இன்று காலை முதல் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கதிராமங்கலம் பகுதியை பார்வையிட ஓஎன்ஜிசி அதிகாரிகளுடன் வந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷுடன் மக்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனிடையே அங்குள்ள வனத்துறை கோவில் அருகே ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் திடீரென தீபிடித்தது. தீ மேலும் பரவாமல் இருக்க அங்கிருந்த போலீசார் பச்சை செடிகளை கொண்டு தீயை அணைத்தனர். தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.