விவசாயி வீட்டில் கைவைரிசையைக் காட்டிய போலீஸ்காரர் கைது
ராசிபுரம்: நாமக்கல்லில் விவசாயி வீட்டில் திருடிய போலீஸ்காரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள மூலப்பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி ஒரு விவசாயி. இவர் ராசிபுரத்தில் குடியிருந்து வந்தார். இவரது வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி 33 பவுன் நகை மற்றும் 1.5 லட்சம் ரொக்கப்பணம் திருட்டுப்போனதாக கூறப்பட்டது.
இதுபற்றி ராசிபுரம் போலீசார் அப்போது வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூரைச் சேர்ந்த குமார் என்கிற கூலக்குமார், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த தேவராஜன் என்கிற நவீன்குமார் ஆகிய இருவரையும் விருதுநகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது ராசிபுரம் அருகேயுள்ள பட்டணத்தைச் சேர்ந்த மவுளீஸ்வரன் என்பவருடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது பற்றி விருதுநகர் போலீசார் ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் ராசிபுரம் பட்டணம் செல்லும் சாலையில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே நின்று கொண்டிருந்த மவுளீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
இவர் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர். மவுளீஸ்வரனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பின்வரும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
மவுளீஸ்வரன் 4 வருடங்களுக்கு முன்பு கோவை மத்திய சிறைச்சாலையில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது விருதுநகர் போலீசார் கைது செய்த குமார், தேவராஜன் இருவரும் ஒரு திருட்டு வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
அப்போதுதான் சிறைக்காவலர் மவுளீஸ்வரன் மற்றும் குமார், தேவராஜன் ஆகியோர் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. மவுளீஸ்வரன் 3 மாதம் விடுமுறையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
திருட்டு வழக்கில் கைதாகி உள்ள மவுளீஸ்வரன் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவாரா என்பது சிறைத்துறை உயர் அதிகாரிகளின் நடவடிக்கையை பொறுத்துதான் தெரிய வரும்.