என்னாது ஏடிஎஸ்பி பெண்ணை அடித்தாரே.. இல்லையே.. பச்சையாகப் புழுகிய அமைச்சர்!
சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என்று போராடிய பெண் ஒருவரை ஏடிஎஸ்பி அடிக்கவே இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் தங்கமணி பச்சையாய் புளுகினார்.
சென்னை: திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி, டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
சாமளாபுரம் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பெண்கள் மீது தாக்குதல் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இதில் ஈஸ்வரி என்ற பெண்ணுக்கு காது கேட்கும் திறன் பறிபோனது.
பதவி உயர்வு
காட்டுமிராண்டி போல் நடந்து கொண்ட ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்தது. ஆனால் தமிழக அரசோ அவருக்கு ஈரோடு சிறப்பு அதிரடிப்படை கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளித்து அழகு பார்த்தது.
சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி
எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பெண்ணை அடித்த போலீஸ் அதிகாரிக்கு எப்படி பதவி உயர்வு கொடுக்கலாம் என்று சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இது கண்டிக்கத்தக்க செயல் என்றும் அவர் கூறினார்.
அமைச்சரின் பச்சை புளுகு
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, சாமளாபுரத்தில் பெண்களை ஏடிஎஸ்பி அடிக்கவேயில்லை என்று பச்சையாய் புளுகியுள்ளார். மேலும், தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
கடும் எதிர்ப்பு
பெண்களை மதிக்கும் தமிழ் சமூகத்தில் மதுவிற்கு எதிராக போராடிய பெண்ணை நடுரோட்டில் அடித்து கேட்கும் திறனை இழக்கச் செய்த போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுத்ததோடு, அவர் யாரையும் அடிக்கவில்லை என்று பச்சையாய் பொய் சொல்லும் அமைச்சர் தங்கமணிக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது.