சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை சேலத்தில் மீட்பு
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று கடத்தப்பட்ட பெண் குழந்தை சேலத்தில் மீட்கப்பட்டுள்ளது.
சேலம்: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை சேலத்தில் மீட்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை. மணிமேகலைக்கும், அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு மணிமேகலை பிரசவத்திற்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிமேகலைக்கு உதவி செய்ய அவரது உறவினர்கள் யாரும் இல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இதை பார்த்து சுபத்ரா என்ற மருத்துவமனை ஊழியர், அவரின் பக்கத்தில் இருந்து, தேவையான உதவிகளை செய்து வந்தார்.
இதனால், இருவருக்கும் நட்பு அதிகம் ஆகி தங்கள் குடும்ப விஷயங்களை பரிமாறி கொண்டனர். மணிமேகலை, தான் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் முதல் குழந்தையை வளர்க்கவே தன்னிடம் பொருளாதாரம் இல்லை, 2வது குழந்தையை எப்படி வளர்க்க போகிறேன் என கூறியுள்ளார்.
உடனே சுபத்ரா, இதுபற்றி தனக்கு தெரிந்த சேலம் வழக்கறிஞர் ஒருவருக்கு தெரிவித்துள்ளார். அவர், நேற்று காலை சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று, குழந்தையின் தாயிடம் பேசினார். அப்போது, ஏற்கனவே, இரண்டரை வயது குழந்தையை வைத்து கொண்டு கஷ்டப்படுகிறீர்கள், எனவே பெண் குழந்தையை எனக்கு கொடுத்துவிடு, தேவையான பணத்தை கொடுக்கிறேன் என்று மணிமேகலையிடம் பேரம் பேசினார். ஆனால் மணிமேகலை இதற்கு சம்மதிக்கவில்லை.
இதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்தால் மருத்துவமனையில் வேலைக்கு எடுப்பார்கள் என கூறி, மருத்துவ பரிசோதனைக்காக மணிமேகலையை வழக்கறிஞர் அழைத்து சென்றுள்ளார். பின்னர், மணிமேகலையிடம் மருத்துவ பரிசோதனைக்கான ரசீதை எடுத்து கொடுத்துவிட்டு, நீ மருத்துவ பரிசோதனை செய்ய போ, நான் உன் குழந்தையை பார்த்துக்கிறேன் என்று கூறினார்.
மணிமேகலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்குள் சென்ற உடன் குழந்தையை எடுத்து கொண்டு வழக்கறிஞர் காரில் தப்பி சென்று விட்டதாக தெரிகிறது.
மருத்துவ பரிசோதனை முடிந்து வெளியே வந்து பார்த்த மணிமேகலை, குழந்தையும், வழக்கறிஞரும் மாயமானது கண்டு கதறி அழ தொடங்கினார். தகவலின் பேரில், போலீசார் மணிமேகலையை அழைத்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், குழந்தைகள் நல மருத்துவமனை ஊழியர் சுபத்ராவை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.
இதுகுறித்து ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீன் நாராயண பாபு,குழந்தையைக் கண்டுபிடிப்பதற்கான அனைத்து உதவிகளையும் போலீசாருக்கு வழங்குகின்றோம். 24 மணிநேரத்திற்குள் எப்படியும் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என உறுதியளித்தார்.
சேலத்தில் மீட்பு
பூக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது தங்கையை தேடி சேலம் விரைந்தனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று கடத்தப்பட்ட பெண் குழந்தை 24 மணி நேரத்தில் சேலத்தில் மீட்கப்பட்டது.