தற்கொலை முயற்சி வழக்கு.. விசாரணைக்கு ஆஜராக நடிகை ஓவியாவுக்கு போலீஸ் சம்மன்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்ற வழக்கில் நேரில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்ற வழக்கில் நேரில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஓவியா. அவரது வெளிப்படையான பேச்சு, மற்றவருக்கு தீங்கு நினைக்காத மனசு, நேர்மை, என தனது நற்குணங்கள் தமிழக நெஞ்சங்களை கொள்ளை கொண்டார் ஓவியா.
இதனால் சக குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட போதும் அவருக்கு வாக்குகளை அள்ளி வழங்கி பிக்பாஸ் வீட்டிலேயே நீடிக்கும் வாய்ப்பை கொடுத்தனர் மக்கள். ஆனால் ஜூலியின் நம்பிக்கை துரோகம், காயத்ரி தனி குரூப்பை அமைத்து தனிமைப்படுத்தியது, ஆரவால் வந்த ஏமாற்றம் என கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் ஒவியா.
தற்கொலைக்கு முயன்ற ஓவியா
இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் மூழ்சி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அடிவாங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி
ஓவியா வெளியேறியதற்குப் பின் பிக்பாஸ் நிகழ்ச்சி படுத்துவிட்டது. ஓவியாவுக்காக மட்டுமே இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் அவர் இல்லாத நிகழ்ச்சியை பார்ப்பதில்லை என முடிவு எடுத்து விட்டனர்.
ஓவியாவுக்கு சம்மன்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்ற வழக்கில் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாலாஜி என்ற வழக்கறிஞர் புகார் அளித்திருந்தார்.
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை
இந்நிலையில் நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், தற்கொலை விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விளக்க, ஸ்டேஷனில் ஆஜராகும்படி ஓவியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார். ஓவியாவின் மேனேஜரிடம் அவர் விசாரித்தபோது, தற்கொலைக்கு அவர் முயற்சிக்கவில்லை என்று தெரிவித்ததாக இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.