சுவாதி கொலை வழக்கில் புதிய திருப்பம்.. நண்பரிடம் போலீசார் தீவிர விசாரணை !
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் பெண் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, அவரின் நண்பரிடம் சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் விசாரணை குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சுவாதி. இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் சிஸ்டம் என்ஜீனியராக பணிபுரிந்து வந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சென்னையில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், அந்த வழக்கு சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது.இந்த கொலையை செய்த மர்ம நபர் யார் என, போலீசார் 8 தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். மேலும், பெங்களூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சூளைமேடு, நுங்கம்பாக்கம் பகுதிகளில் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சுவாதியின் ஆண் நண்பர்கள் இருவரிடம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது கொலையாளியின் படத்தை காண்பித்து, சென்னை மாநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன், கூடுதல் ஆணையர் சங்கர் ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. பின்னர் விசாரணை குழுவினரிடம் காவல் ஆணையர் ராஜேந்திரன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த கொலை குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளில் கொலையாளி என சந்தேதிக்கப்படுபவரின் உருவம் தெளிவாக தெரியவில்லை என்பதால், அந்த உருவத்தின் அடிப்படையில், உருவ படம் வரைந்து ஊடகங்கள் மூலமாக அதை வெளியிட்டு, மக்களின் உதவியை நாட போலீசார் முடிவு செய்துள்ளனர்.