கூவத்தூர் ரிசார்ட்டுக்குள் புகுந்த அதிரடிப்படை.. 3 மணி வரை எம்.எல்.ஏக்களுக்குக் கெடு!
கூவத்தூர் ரிசார்ட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 மணிக்குள் வெளியேற போலீஸார் இறுதிக் கெடு விதித்துள்ளனர்.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை தெற்குத் தொகுதி எம்எல்ஏ சரவணன் புகார் அளித்தைத் தொடர்ந்து அங்கு போலீஸார் விரைந்துள்ளனர். அதிரடிப்படையினர் அதிரடியாக உள்ளே நுழைந்துள்ளனர். எம்.எல்.ஏக்கள் 3 மணிக்குள் வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் 8வது நாளாக கூவத்தூர் ரிசார்ட்டில் கடத்தி அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து மாறுவேடத்தில் தப்பி வந்த எம்எல்ஏ சரவணன் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். கூவத்தூர் ரிசார்ட்டில் விசாரணை நடத்திய போலீசாருடன் எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் எம்.எல்.ஏ.க்கள் கடத்தல் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். எடப்பாடி பழனிச்சாமியை போலீஸ் கைது செய்யலாம் என்பதால் கூவத்தூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அதிரப்படையினரும் உள்ளே நுழைந்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. கூவத்தூர் ரிசார்ட்டை சுற்றிலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கூவத்தூர் ரிசார்ட்டுக்குள் அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.