மாமல்லபுரம் செல்லத் தயாராகும் கள்ளக் காதல் ஜோடிகளுக்கு ஒரு எச்சரிக்கை!
சென்னை: காதலர் தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் அத்துமீறி நடக்கும் கள்ளக்காதல் ஜோடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.
நாளை காதலர் தினம். இதையொட்டி சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கடற்கரை, சுற்றுலாத் தலங்களில் காதல் ஜோடிகளின் கூட்டம் அலை மோதும். கூடவே கள்ளக்காதல் ஜோடிகளின் கூட்டத்திற்கும் பஞ்சம் இருக்காது.
குறிப்பாக மாமல்லபுரத்தில் காதல் ஜோடிகளுக்கு இணையாக கள்ளக்காதல் ஜோடிகளும் அதிக அளவில் வருவார்கள். இவர்கள் குடவரை கோவில் சிற்பங்கள் அருகே உள்ள புதர்களில் பதுங்கி மது அருந்துவது, ஆபாசமான சில்மிசங்கள் போன்ற அத்துமீறல் செயல்களில் ஈடுபடுவர். இதனால் குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாகவும் சில நேரம் இளைஞர்களுக்குள் தகராறும் ஏற்படுவதுண்டு.
இதை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் போலீசார் சாதாரண உடையில் காதலர்களை கேமராவுடன் கணகாணிக்கவுள்ளனர். மேலும் அத்துமீறும் இளம் ஜோடிகளை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் கூறியுள்ளனர். மேலும், கள்ளக் காதல் ஜோடிகளுக்கோ, காதல் ஜோடிகளுக்கோ லாட்ஜில் மணிக்கணக்கில் ரூம் கொடுத்தால் லாட்ஜ் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.