பெண் போலீஸ் கொலை செய்யப்பட்டாரா?.. மானாமதுரையில் பரபரப்பு!
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிகுளம் கிராமத்தில் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரைக் கொலை செய்து விட்டதாக பரபரப்பு எழுந்துள்ளது.
கட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகள் சர்மிளாதேவி ((25) புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்தார். கட்டிகுளத்தைச் சேர்ந்த உறவினரான வீரராகவன் என்பவரை காதல் திருமணம் செய்தவர்.
ஒடிசாவில் ராணுவத்தில் வீரராகவன் பணிபுரிகிறார். கடந்த 2013ல் திருமணம் முடிந்து இரண்டரை வயதில் விகாஷ் என்ற ஆண்குழந்தை உள்ளது. தற்போது 8 மாத கர்ப்பிணியாக சர்மிளாதேவி உள்ளார். விடுமுறையில் கட்டிகுளத்திற்கு 20 நாட்களுக்கு முன் வந்துள்ளார். வீரராகவனும் இரண்டு மாத விடுமுறையில் கட்டிகுளம் வந்துள்ளார்.
வந்த இடத்தில் இருவருக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று மாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், சர்மிளாதேவி வீட்டின் மாடி அறையில் தூக்கு போட்டு மயங்கி கிடந்துள்ளார். அவரை வீரராகவனின் உறவினர்கள் முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சர்மிளா தேவியை தூக்கி வந்தனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து கட்டிகுளத்திற்கு உடலைக் கொண்டு சென்றுள்ளனர் உறவினர்கள்.
சர்மிளாதேவி உயிரிழந்த தகவல் அறிந்ததும் பதறிப் போன அவரது பெற்றோர் மானாமதுரை போலீசில் தனது மகளை கொலை செய்து விட்டதாக புகார் அளித்துள்ளனர். மானாமதுரை டிஎஸ்பி பாலமுருகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ஆர்டிஓ விசாரணையும் நடைபெறுகிறது.
சர்மிளாவின் தந்தை லட்சுமணன் கூறுகையில் எனது மகள் தூக்கு போட்டு இறந்ததாக கூறப்படும் மாடி அறை ஓட்டு வீடு, அதில் தூக்கில் தொங்க வாய்ப்பில்லை. வீரராகவன் குடும்பத்தினர் அடித்து கொலை செய்துள்ளனர் என்றார்.
இந்த விவகாரம் மானாமதுரையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.