எடப்பாடி அணியை பிளாக்மெயில் செய்வதுதான் ஓபிஎஸ் கோஷ்டியின் ஆரோக்கிய அரசியலா?
எடப்பாடி அணியிலிருந்து 12 அமைச்சர்கள், 35 எம்எல்ஏ-க்கள் ஓபிஎஸ் அணிக்கு வர தயாராக உள்ளனர் என்று செம்மலை தெரிவித்துள்ளது ஆரோக்கிய அரசிய அல்ல என்கின்றனர் அரசியல் நோக்காளர்கள்.
சேலம்: எடப்பாடி அணியிலிருந்து 12 அமைச்சர்கள், 35 எம்எல்ஏ-க்கள் ஓபிஎஸ் அணிக்கு வர தயாராக உள்ளனர் என்று ஓபிஎஸ் அணியின் எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளது ஆரோக்கியமான அரசியலாக தெரியவில்லை.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும் இணைவதாக பச்சைக் கொடி காட்டிக் கொண்டனர். இந்நிலையில் பேச்சுவார்த்தைக்காக குழுக்கள் அமைக்கப்பட்டு யார் முதலில் பேசுவது என்று காத்துக் கொண்டிருந்தனர்.
சசிகலா உள்ளிட்டோரின் குடும்பத்தினரை அறவே கட்சியிலிருந்து ஒதுக்க வேண்டும், அவருக்கும், தினகரனுக்கும் வழங்கப்பட்ட பதவிகளை திரும்ப பெறுவது, ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஓபிஎஸ் அணி சார்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
ஜகா வாங்கிய எடப்பாடி அணி
இதை கேட்டதும் எந்தவித பதிலையும் சொல்லாமல் எடப்பாடி அணியினர் மௌனம் காத்து வந்தனர். எனினும் இரு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மாறி மாறி கருத்தை தெரிவித்து வந்தனர். இதில் நக்கல், நய்யாண்டிகளும் அடங்கும். இந்நிலையில் நல்ல நாள் பார்த்து இரு அணிகளும் பேசி ஒன்றிணைவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த வேளையில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான பிரமாண பத்திரத்தில் பொதுச் செயலாளராக சசிகலாவின் பெயரும், துணை பொதுச் செயலாளராக தினகரனின் பெயரும் இடம்பெற்றிருந்ததால் ஓபிஎஸ் அணியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
நிம்மதி இல்லை
இந்நிலையில் தம் அணிக்கு பெரும்பாலான எம்எல்ஏ-க்களின் பலம் உள்ளதால் நாம் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை என்று எடப்பாடி அணியினர் இருந்தனர். இதனால் பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. சேலத்தில் நடைபெற்ற ஓ.பி.எஸ். அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய செம்மலை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் தற்போது அமைச்சர்கள் யாரும் நிம்மதியாக இல்லை.
அணிமாற தயார்
இதனால் எடப்பாடி அணியிலிருந்து 12 அமைச்சர்களும், 35 எம்எல்ஏ-க்களும் எங்கள் அணி மாற தயாராக உள்ளனர் என்று செம்மலை தெரிவித்துள்ளார். இதை பார்க்கும் போது எடப்பாடி அணியினரை மிரட்டி பணிய வைப்பது போல் உள்ளது. இதே செம்மலை, ஓ.பன்னீர் செல்வத்தை நக்கலாக பேசிய அமைச்சர் ஜெயகுமாரை
மூன்றாம் தர அரசியல்வாதி, ஆரோக்கிய அரசியலா அது... இது... என்று வெளுத்து வாங்கினார்.
சசிகலா மீது அதிருப்தி
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலா மீது இருந்த வெறுப்பு காரணமாகவும், சசிகலாவுக்கு முன்னர் மூச்சு விட பயந்த நிர்வாகிகள் மத்தியில் தைரியமாக (பதவிக்காகதான்) அவரை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் வெளி வந்ததாலும் பொதுமக்களுக்கு ஓபிஎஸ் மீதும், ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் மீது கரிசனம் ஏற்பட்டது. ஒரு சிலர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏ-க்களை போன் மூலம் தொடர்பு கொண்டு நல்ல வேலை செய்தீர் என்று பாராட்டியுள்ளனர்.
வெறுப்புதான் உண்டாகும்
இந்நிலையில் கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் பேரம் பேசப்பட்டு பணிய வைத்ததாக ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தார் ஓ.பன்னீர் செல்வம். தற்போது ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்எல்ஏ செம்மலையின் பேச்சு, ஏதோ பாஜக தங்கள் பக்கம் உள்ளதை காரணம் காட்டி எடப்பாடி அணிக்கு மிரட்டல் விடுப்பது போல் உள்ளது. மக்களை சந்தித்து நாங்கள் நியாயம் கேட்போம், எடப்பாடி அரசின் குறைகளை சுட்டிக் காட்டுவோம் என்று கூறிவிட்டு மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த கீழ்த்தரமான அரசியலை நடத்தினால் ஓபிஎஸ் அணிக்கும், எடப்பாடி அணிக்கு்ம எந்த வித்தியாசம் என்றும் இது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிகோலாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.