சித்தியும் பார்க்கல.. கட்சி கைநழுவுது.. போலீஸ் விரட்டுது.. எப்படி தப்புவது? திகிலில் தினகரன்
இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி . தினகரை கைது செய்ய டெல்லி போலீஸ் சென்னை வந்துள்ளது.
சென்னை : ஜனநாயகத்தை தோற்கடிக்கும் பணநாயகத்தின் உச்சகட்டமாக அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தேர்தல் ஆணையத்தை வளைக்க லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் டெல்லி போலீஸ் நெருங்குவதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்களுடன் அவர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக சுமார் 60 கோடி ரூபாய் பேரம் பேசி அதன் முதற்கட்டமாக 1 கோடியே 30 லட்சத்தை அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கொடுத்தார் என்று டெல்லியில் கைதான சுகேஷ் சந்தர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தினகரன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
டெல்லி போலீஸ்
இதனையடுத்து தினகனரனுக்கான சம்மனுடன் 3 பேர் அடங்கிய டெல்லி போலீஸ் குழு சென்னை வந்துள்ளது. இந்நிலையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளரும் தனது சித்தியுமான சசிகலாவை சந்திக்க பெங்களூர் சென்றார் தினகரன்.
சசிகலா கோபம்
ஆனால் அதிமுகவை அழிவு நிலைக்கு தள்ளியதாக எழுந்த கோபமோ என்னவோ சசிகலா தினகரனை சந்திக்க ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் ஹோட்டலிலேயே முடங்கியிருந்த தினகரன் சித்தி பார்க்கவில்லையே என்ற கவலையுடன் இன்று காலை சென்னை திரும்பினார்.
நெருக்கடியில் தினகரன்
சென்னை திரும்பிய தினகரனுக்கு மற்றொரு ஷாக்காக வாங்க புடிச்சு ஜெயில்ல போட ரெடியா இருக்கோம் என்கிற தொணியில் டெல்லி போலீஸ் வந்துள்ளது. அடுத்தடுத்து வரும் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் குழப்பத்தில் தினகரன் உள்ளதாகக் கூறப்படுகிறது.
வக்கீல்களுடன் ஆலோசனை
இந்நிலையில் தற்போது தலைக்கு மேல் கத்தியை தொங்க விட்டுள்ள டெல்லி போலீசை எப்படி சமாளிப்பது என்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் வழக்கறிஞர்களுடன் தினகரன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறாராம். சித்தியிடமும் பிரச்னையை சொல்லி குமுற முடியவில்லை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று கட்சியையும் ஆட்சியையும் தானே வசப்படுத்திக்கொள்ளலாம் என்ற கனவும் தகர்ந்து போனது. இது மட்டுமில்லாமல் எந்த நேரம் வேண்டுமானால் டெல்லி போலீஸ் கைது செய்யலாம்.... இப்படி அடுத்தடுத்து பிரஷர் ஏற்றும் நிகழ்வுகளால் செய்வதறியாது திக்குமுக்காடிப் போயுள்ளார் தினகரன்.