காவிரியின் குறுக்கே அணை.. கர்நாடகத்தைக் கண்டித்து திருமா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம்
சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடகம் புதிய அணைகளை கட்டும் முயற்சியை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் காவிரி பங்கீட்டு குழுவினை உடனே அமுல் செய்ய கோரியும், காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில்
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் சார்பில் பலராமன், மாவட்ட தலைவர் ரங்கபாஷியம், தே.மு.க. எம்.எல்.ஏ. அருள்செல்வன், பா.ம.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், இந்திய தேசிய லீக் பொது செயலாளர் நிஜாமுதீன் பங்கேற்றனர்.
ஏராளமான விவசாய சங்க பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் அனைத்து கட்சி தலைவர்களும் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டனர். இதன் பின்னர் விவசாய சங்க பிரதிநிதிகள் கவர்னரிடம் மனு கொடுக்க சென்றனர்