தெருவுக்கு வந்த குடும்ப பிரச்சனை: கணவரை வீட்டை விட்டு விரட்டிய தீபா
சென்னை: குடும்பம் மற்றும் அரசியல் பிரச்சனை காரணமாக தீபா தனது கணவர் மாதவனை வீட்டை விட்டு விரட்டிவிட்டாராம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகளான தீபாவை அரசியலுக்கு வருமாறு அதிமுக தொண்டர்கள் பலர் வலியுறுத்தினர்.
இதையடுத்து சுபயோக சுபதினத்தில் அரசியலுக்கு வந்தார் தீபா.
ஜெ. தீபா பேரவை
தீபா புதிய அரசியல் கட்சியை துவங்கினார். அதற்கு ஜெ. தீபா பேரவை என்று பெயர் வைக்கப்பட்டது. கட்சியின் செயலாளராக தனது கார் டிரைவர் ராஜாவையும், தலைவராக அவருடைய மனைவி சரண்யாவையும் நியமித்தது தொண்டர்களுக்கும், தீபாவின் கணவர் மாதவனுக்கும் பிடிக்கவில்லை.
மாதவன்
கட்சியின் முக்கிய பொறுப்பை எதிர்பார்த்து அது கிடைக்காததால் மாதவனுக்கு தீபா மீது கோபம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
புதுக் கட்சி
ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற மாதவன் புதிய கட்சி துவங்கப் போவதாக தெரிவித்தார். ஆனால் அதற்கு யாரும் ஆதரவு அளிக்காததால் அமைதியாக இருந்துவிட்டார்.
தீபா
கட்சி தொடர்பாக தீபா மற்றும் மாதவனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் தான் தீபா ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தபோது கணவரின் பெயரை குறிப்பிடவில்லை என்று கூறப்பட்டது.
சண்டை
அரசியல், புதுக்கட்சியால் ஏற்பட்ட பிரச்சனை பெரிதாகி மாதவன் தீபாவை பிரிந்தார். இந்நிலையில் மாதவன் நேற்று தீபாவின் வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார்.
போய்யா
வீட்டுக்கு வந்த கணவனை தீபா விரட்டிவிட்டாராம். இதனால் அங்கு தீபா மற்றும் மாதவன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்துள்ளனர்.