சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் 125வது பிறந்தநாள்... ஜெயலலிதா, வைகோ மலர்தூவி மரியாதை
சென்னை: சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் அம்பேத்கரின் உருவ சிலைக்கும், உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் உருவப்படத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைக் குடியரசுத் தலைவர் அமீது அன்சாரி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 1891ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவ்வில் அம்பேத்கர் பிறந்தார். மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியான இவரின் முழு வாழ்க்கையையும் சமூக மாற்றங்களுக்காக அர்ப்பணித்தார்.
அம்பேத்கர் சாதாரண குடிமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கினார். அவரின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. அம்பேத்கர் வாழ்க்கையோடு தொடர்புடைய பகுதிகளான நாகபுரி, மும்பை ஆகிய இடங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.
ஜெயலலிதா மரியாதை
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா,போயஸ் தோட்ட இல்லத்தில் அம்பேத்கரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முதல்வர் ஓ.பி.எஸ்...
கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் முதல்வர் பன்னீர் செல்வம் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அமைச்சர்கள் மரியாதை
சென்னை துறைமுகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பி.வி ரமணா, வளர்மதி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வைகோ மரியாதை
துறைமுகம் அருகில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இமயம் ஜெபராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
ஸ்டாலின் மரியாதை
திமுக பொருளாளர் முக ஸ்டாலின் கோயம்பேடிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.