ஜெயலலிதாவுக்கு மேனகா கடிதம்: ஒதுங்கும் பாஜக, சாடும் காங்கிரஸ்
சென்னை: பெங்களூர் சிறையில் இருந்து அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வெளிவந்த பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான மேனகா காந்தி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், பாஜக தங்கள் கட்சிக்கும் மேனகா காந்தியின் கடிதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டுள்ளது. அதேசமயம் காங்கிரஸ் கட்சி பாஜகவை சாடியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜாமீனில் விடுதலையானார். சனிக்கிழமையன்று சென்னை திரும்பினார்.
அவருக்கு பாஜகவைச் சேர்ந்த, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதத்தில், ஜெயலலிதாவுக்குச் சிறைத் தண்டனை கிடைத்திருப்பதற்காகத் தான் வருத்தமடைவதாகத் தெரிவித்திருந்தார்.
ஜெயலலிதாவுக்குத் தமது ஆதரவும் அனுதாபமும் இருப்பதாகவும் ஜெயலலிதாவின் கஷ்டத்தைப் போக்கத் தாம் ஏதாவது செய்யமுடியும் என்றால் அதைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் மேனகா காந்தி தெரிவித்திருந்தார்.
அத்துடன் ஜெயலலிதாவின் துன்பங்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் ஜெயலலிதா மீண்டும் முறைப்படி மாநில நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பு வகிப்பதை அனைவரும் பார்க்கத்தான் போகிறோம் என்றும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
நன்றி சொன்ன ஜெ
இந்த கடிதத்திற்கு நன்றி கூறி ஜெயலலிதாவும் பதில் கடிதம் எழுதியிருந்தார். இது அரசியல்வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஒதுங்கல்
மேனகா காந்தி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருந்ததாகவும், இது பாஜகவின் கொள்கையை வெளிப்படுத்துவதாக அமையாது என்றும் பாஜகவின் செயலர் முரளிதர் ராவ் கூறியுள்ளார்.
சாடிய தலைவர்கள்
இதனிடையே ஊழல் தண்டனை வழக்கில் சிறை சென்று வந்துள்ள ஜெயலலிதாவிற்கு பாஜக அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் கடிதம் எழுதிய பிரதமர் மோடிக்கு தெரியாதா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரஷீத் அல்வி கேள்வி எழுப்பியுள்ளார்.